Pages

செவ்வாய், மார்ச் 05, 2013

ஐநாவில் இலங்கை போர்க்குற்றம்: இந்திய அநீதிக்கு ஒரு முடிவே இல்லையா? உதிரும் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட இந்தியாவில் தமிழர்களுக்கு இல்லை!

ஐநாவில் இலங்கை மீது ஒரு புதிய தீர்மானத்தை முன்வைக்க உள்ளது அமெரிக்கா. 'புதிய பானையில் பழைய கள்' என்பது போன்றுதான் இந்த தீர்மானம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு பலவீனமான தீர்மானத்தைக் கூட ஒரேயடியாக உப்பு சப்பில்லாமல் செய்யும் சதியில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அரசுக்கு தமிழர்கள் மீது ஏன் இந்த வெறுப்பு என்று புரியவில்லை!

தமிழர்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்களின் முக்கிய கோரிக்கையான "சுயேச்சையான பன்னாட்டு விசாரணை" என்கிற கோரிக்கையை உள்ளடக்கியதாக அமெரிக்க தீர்மானம் இருக்காது. அதே நேரத்தில், நம்பிக்கை இழக்கும் அளவுக்கு பலவீனமாகவும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா செய்யும் சதி என்ன?

இந்திய நாடாளுமன்றத்திலும் வெளியிலும் அமெரிக்க தீர்மானத்தை பார்த்துவிட்டுதான் முடிவு செய்வோம் என்பது போல மேலோட்டமாக பேசினாலும், இந்தியாவுக்கு எல்லாம் தெரியும். உண்மையில் அமெரிக்க தீர்மான விவரங்களை தெளிவாக தெரிந்துகொண்டு, திரைமறைவாக தமிழர்களுக்கு எதிரான ராஜதந்திர போரில் ஈடுபட்டுள்ளது இந்திய அரசு. அமெரிக்க தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்ய மிகக் கடினமான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்க தீர்மானம் கூறுவது என்ன?

அமெரிக்கா 2012 ஆம் ஆண்டில் கொண்டுவந்த தீர்மானத்தைக் காட்டிலும் ஒருபடியாவது மேலானதாகவே புதிய தீர்மானம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு தீர்மானத்தில் கூரப்பட்டுள்ள அனைத்து பரிந்துரைகளும் புதிய தீர்மானத்தில் மீண்டும் வலியுறுத்தப்படும். கூடவே, ஐநா மனித உரிமைகள் சிறப்பு விசாரணை வல்லுநர்களை (special rapporteurs) இலங்கைக்கு அனுப்ப அமெரிக்க தீர்மானம் வலியுறுத்தும் என்று தெரிகிறது.

குறிப்பாக, நீதித்துறையின் சுதந்திரம், மனித உரிமை செயல்பாட்டாளர்களின் பாதுகாப்பு, கருத்து சுதந்திரம், கூட்டமாகக் கூடும் உரிமை, சட்டவிரோதமான விசாரணை இல்லாத அரச படுகொலைகள், சிறுபான்மையினர் உரிமை, காணாமல் போவோர் நிலை, பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறை என ஒவ்வொரு மனித உரிமை களநிலைமை குறித்தும் ஐநா மனித உரிமை சிறப்பு விசாரணை வல்லுநர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்பதும், அவர்களுக்கு இலங்கை அரசு கட்டுப்பாடற்ற அனுமதி அளிக்க  வேண்டும், விரும்பிய இடங்களுக்கு அவர்கள் செல்லவும் எல்லோரையும் விசாரிக்கவும் அனுமதிக்க வேண்டும் என்பதும் அமெரிக்காவின் புதிய தீர்மானத்தில் இடம் பெறும் என்று தெரிகிறது.

இவ்வாறு மனித உரிமை துறைகள் சார்ந்த சிறப்பு விசாரணை வல்லுநர்கள் தரும் அறிக்கைகளின் அடிப்படையில் ஐநா மனித உரிமைகள் ஆணையர் மீண்டும் ஐநா மனித உரிமைக் குழுவிற்கு அறிக்கை தரவேண்டும் என்று புதிய தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இலங்கை அரசு வெளியிலிருந்து சுயேச்சையான விசாரணை வல்லுநர்களை அனுமதிக்காமல் நீண்டகாலமாக ஏமாற்றி வந்துள்ளது. இதற்கு ஒரு முடிவு கட்ட முயல்கிறது அமெரிக்க தீர்மானம். ஏற்கனவே, ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் - ஐநா சிறப்பு விசாரணை வல்லுநர்களை இலங்கை அரசு நீண்டகாலமாக அனுமதிக்காததன் காரணமாகவே தானும் அங்கு செல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் சதி

இலங்கைக்கு இந்தியா ஒரு அண்டை நாடு என்கிற அடிப்படையிலும், தெற்காசியாவில் இந்தியா ஒரு முக்கியமான சக்தி என்பதாலும் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் நிலைபாட்டை முக்கியமாகக் கருதுகின்றன. கூடவே, அமெரிக்க அரசு இந்தியாவுடன் நல்லுறவை விரும்புவதால் அவர்களும் இந்திய கருத்துக்கு மதிப்பளிக்க விரும்புகின்றனர்.

இந்த ஒரு நல்வாய்ப்பை நீதிக்கும் நியாயத்துக்கும் மனித உரிமைக்கும் ஆதரவாக பயன்படுத்துவதற்கு பதிலாக, தமிழ் மக்களை பழிவாங்க நினைக்கிறது இந்திய அரசு.
உலகில் எல்லா நாடுகளுக்கும் அந்தந்த நாடுகளின் மனித உரிமை நிலையை ஆய்வு செய்ய வெளியிலிருந்து சுயேச்சையான ஐநா விசாரணை வல்லுநர்களை அனுப்புவது ஒரு வழக்கமான நடைமுறைதான் என்றாலும் - இலங்கைக்கு வலுக்கட்டாயமாக ஐநா விசாரணை வல்லுநர்கள் அனுப்பப்படுவதை எதிர்க்கிறது இந்தியா.

இலங்கை ஒரு இறையாண்மை மிக்க நாடு. அங்கு அந்நிய தலையீடு கூடாது என்கிற வழக்கமான பல்லவியைப் பாடி ஐநா விசாரணை வல்லுநர்கள் அனுப்பப்படாமல் தடுக்க சதி செய்கிறது இந்திய அரசு. (புலிகளுக்கு எதிரான போருக்கு மட்டும் அந்நிய உதவி இருக்கலாம். ஆனால் மனித உரிமையில் இருக்கக் கூடாதாம்)

தமிழகமே திரண்டு இலங்கைக்கு எதிராகப் போராடும் போது இந்தியா இலங்கைக்கு ஆதரவாக நிற்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். உடலில் இருந்து உதிரும் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட இந்திய அரசில் தமிழர்களுக்கு இல்லை என்பதை இது உறுதி செய்கிறது.

அமெரிக்க தீர்மானம்: தமிழர்களுக்கு வெற்றியா? தோல்வியா?

அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானம் தமிழர்களுக்கு வெற்றியா? தோல்வியா? என்பது அதை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது. நீதி, நியாயம் என்கிற அறம் சார்ந்த தத்துவங்களின் அடிப்படையில் பார்த்தால் அந்த தீர்மானம் ஒரு நல்ல தீர்மானம் அல்ல. மனிதகுலம் இதுவரை சந்தித்திராத ஒரு பேரவலத்தை சந்தித்த மக்களுக்கு அது நீதி வழங்காது.

ஆனால், தனக்கென பேச ஒரு நாடு இல்லாத தமிழர்களின் பரிதாப நிலையில் இருந்து பார்த்தால் அந்த தீர்மானம் ஒரு முன்னேற்றம் தான். 

இந்தியாவும் ஐநா தீர்மானமும் - துரோகத்தின் வரலாறு

அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மானம் இலங்கை மீது ஐநா மனித உரிமைக் குழு கூட்டத்தில் வைக்கப்படும் நான்காவது தீர்மானம் ஆகும். 

முதல் தீர்மானம்

2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது ஐரோப்பிய நாடுகளின் முன்முயற்சியில் இலங்கை குறித்த ஒரு சிறப்புக் கூட்டம் ஐநா மனித உரிமைக் குழுவில் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக 30 நாடுகள் சேர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டின் தலைமையில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தன (இங்கே காண்க: Resolution by Switzerland and 30 Countries)
இவ்வாறு ஒரு முயற்சி நடப்பது தெரிந்த உடனேயே இந்தியா, கியூபா, பாகிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகள் கூட்டு சேர்ந்து இலங்கையை காப்பாற்றும் முயற்சிகளை தொடங்கின. இதுகுறித்து 15 மே 2009 அன்று, அதாவது போர் உச்சத்தில் இருந்த பொது, இந்த நாடுகள் தம்மை இலங்கையின் பிரதிநிதிகளாக அறிவித்துக் கொண்டன (இங்கே காண்க: India, Cuba NAM Letter to UNHRC)

இரண்டாவது தீர்மானம்

இதனைத் தொடர்ந்து, இலங்கைக்கு எதிராக 2009 ஆம் ஆண்டு மே மாதம் கூட்டப்பட்ட அதே கூட்டத்தில், இலங்கையைப் பாராட்டி, இலங்கையே ஒரு தீர்மானம் கொண்டுவர வைத்து, அதனை வெற்றிகரமாக நிறைவேற்றவும் வழிசெய்தது இந்தியா (இங்கே காண்க: Resolution by Sri Lanka, India and 11 Countries). "விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை விடுதலை செய்ததற்காக இலங்கையை பாராட்டுகிறோம்" என்று இந்த தீர்மானம் மிகக் கேவலமாக கூறியது.

அமெரிக்காவல் வந்த மாற்றம்

இந்தியா, சீனா, ரஷ்யா, கியூபா - என ஒரு ரவுடிகள் கூட்டம்  ஐநா மனித உரிமைக் குழுவில் ஆதிக்கம் செலுத்தி இலங்கையைக் காப்பாற்றிய அக்காலத்தில் அமெரிக்கா அக்குழுவில் ஒரு உறுப்பு நாடாக இல்லை. 2006 ஆம் ஆண்டில் ஐநா பொதுச்சபையால் உருவாக்கப்பட்ட ஐநா மனித உரிமைக் குழுவில் அமெரிக்கா சேரவில்லை. 2009 ஆம் ஆண்டு இக்குழுவில் சேர ஒபாமா விருப்பம் தெரிவித்தார். அதன்படி செப்டம்பர் 2009 இல் அமெரிக்கா ஐநா மனித உரிமைக் குழுவில் இணைந்தது.

மூன்றாவது தீர்மானம்

2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கூடிய ஐ.நா மனித உரிமைகள் குழுவின் 19 ஆவது கூட்டத்தில் இலங்கை மீது ஓரளவு நெருக்கடியை சுமத்தும் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தது. (இங்கே காண்க: Promoting Reconciliation and Accountability in Sri Lanka)

1. இலங்கை அரசு தானே அமைத்த "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (Lessons Learnt and Reconciliation Commission)" பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும். பன்னாட்டு மனித உரிமை, மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டது குறித்து நியாயமான விசாரணை நடத்தி குற்றமிழைத்தவர்களைத் தண்டிக்க வேண்டும். இதன் மூலம் அனைத்து இலங்கை மக்களுக்குமான நீதி, சமத்துவம், பொறுப்புடைமை மற்றும் நல்லிணக்கம் உறுதி செய்யப்பட வேண்டும்

2. "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு" பரிந்துரைகளை நிறைவேற்றுதற்கான மற்றும்  பன்னாட்டு மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான திட்டம் மற்றும் கால அட்டவணையை கூற வேண்டும்.
3. மேற்கண்ட பரிந்துரைகளை இலங்கை அரசு நிறைவேற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் உதவ வேண்டும். கூடவே, இதனைக் கண்காணித்து, ஐ.நா மனித உரிமைக்குழுவின் 22 ஆவது கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" என்று அமெரிக்க தீர்மானம் கோரியது.

அதே நேரத்தில் 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையானது பன்னாட்டு சட்டங்களின்படி சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை போதுமான அளவுக்கு எதிகொள்ளவில்லை' என்பதையும் அமெரிக்க தீர்மானம் தெளிவாகச் சுட்டிக்காட்டியது.

"அமெரிக்கா முதலில் முன்மொழிந்த தீர்மானத்தில் 'ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் அளிக்கும் உதவியை இலங்கை ஏற்க வேண்டும் (the Government of Sri Lanka to accept)" என்கிற, ஒப்பீட்டளவில் உறுதியான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதனை இந்தியா தலையிட்டு "ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் அளிக்கும் எத்தகைய உதவியும், இலங்கை அரசுடன் கலந்தாலோசனை நடத்தி, அந்நாட்டின் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும் (in consultation with, and with the concurrence of, the Government of Sri Lanka)" என்று மாற்றியது. இந்தியாவின் இந்த உதவிக்கு இலங்கை பாராட்டும் தெரிவித்தது. (இந்திய திருத்தம் - இங்கே காண்க: Oral Revision-Promoting Reconciliation and Accountability in Sri Lanka)
இந்திய துரோகத்துடன், ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம் வெற்றி பெற்றுது.  Promoting Reconciliation and Accountability in Sri Lanka எனும் அத்தீர்மானத்தை ஆதரித்து 24 நாடுகள் வாக்களித்தன. எதிர்த்து 15 நாடுகள் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

2012 தீர்மானத்திற்கு பிறகு நடந்தது என்ன?

2012 ஆம் ஆண்டு மே மாதத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கான ஒரு Task Force அமைத்தது இலங்கை அரசு. அதன் பிறகு ஒரு தேசிய செயல் திட்டத்தையும் (National Action Plan) அறிவித்தது. இவற்றின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் மிகச்சில பரிந்துரைகளை செயல்படுத்துவோம் என்று அறிவித்தது.

இலங்கையின் நிலைமையை ஆராய்வதற்காக ஒரு மூன்று நபர் குழுவை செப்டம்பர் மாதத்தில் அனுப்பினார்  ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை. அதன் அடிப்படையில் ஒரு அறிக்கையையும் 2013 பிப்ரவரி 11 அன்று வெளியிட்டார். (இங்கே காண்க: United Nations Human Rights Commissioner Report on promoting reconciliation and accountability in Sri Lanka)

இலங்கை அரசு இம்மியளவும் திருந்தவில்லை என்பதை அப்பட்டமாக எடுத்துக்காட்டும் இந்த அறிக்கை மார்ச் 20 ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் குழுவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. 

நான்காவது தீர்மானம்

இந்த முறை கொண்டுவரப்படவுள்ள அமெரிக்க தீர்மானம் நான்காவது தீர்மானம் ஆகும். இது கட்டாயம் வெற்றியடையும்.

ஏனெனில், 47 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட  ஐநா மனித உரிமைகள் குழுவில் இலங்கையை எப்போதும் காப்பாற்றிக் கொண்டிருக்கும் நாடுகளான கியூபா, சீனா, ரசியா ஆகிய நாடுகளின் பதவிக்காலம் 2012 ஆம் ஆண்டில் முடிந்துவிட்டது. அவை இப்போது ஐநா மனித உரிமைகள் குழுவில் உறுப்பினர்களாக இல்லை. இலங்கையும் அதில் உறுப்பினராக இல்லை.

இந்த தீர்மானம் மார்ச் 21 அல்லது 22 ஆம் நாள் வாக்கெடுப்புக்கு வரக்கூடும். மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவு மிகக் குறைவு என்பதனால் புதிய தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படாமலேயே நிறைவேற்றப்படும் வாய்ப்பு உள்ளது. சர்வதேச அரங்கில் கொஞ்சமாவது நல்லபெயர் வாங்குவதற்காக இந்தியாவின் ஆலோசனைப்படி, இலங்கையும் அத்தகைய நிலையை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது ஐநா மனித உரிமைக் குழுவில் எஞ்சியுள்ள இலங்கையின் ஒரே தீவிர ஆதரவு நாடு இந்தியா மட்டும்தான். 

மீண்டும் மாட்டப்போகும் இலங்கை

அமெரிக்காவின் புதிய தீர்மானத்தில் ஐநா மனித உரிமைகள் ஆணையர் அவர்கள், தீர்மானத்தின் செயலாக்கம் தொடர்பில் இலங்கை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து 2014 தொடக்கத்தில் கூடும் 25 ஆவது கூட்டத்தில் மற்றுமொரு முழு அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை மீண்டும் சர்வதேச அரங்கில் எதிரொலிக்கும்.

ஒட்டுமொத்தத்தில் அமெரிக்க தீர்மானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும், ஆதரவு ஏதுமற்ற தமிழர்களுக்கு அது ஒரு முன்னேற்றமான தீமானமாக அமையும் என எதிர் பார்க்கலாம். இந்தியாவின் ஆதரவு மட்டும் இருக்குமானால் இலங்கை மிக எளிதாக குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டுவிடும். தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வும் எளிதில் கிடைத்துவிடும். 
ஆனால், அதற்கு நேர்மாறாக தீர்மானம் முன்வைக்கப்படுவதற்கு முன்பாகவே, அமெரிக்காவுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே கட்டைப் பஞ்சாயத்து செய்து தீர்மானத்தை நீர்த்துப் போக இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது (அதாவது இந்தியா தமிழர்களின் சார்பில் அமெரிக்காவிடம் பேசவில்லை. இலங்கை அரசின் சார்பில் பேசுகிறது. வெட்கக்கேடு!). இனியும் இந்த தீர்மானத்தை மேலும் பலவீனப்படுத்த இந்தியா முயலும்.

இனி என்ன?

பன்னாட்டு மனித உரிமைகள் அரங்கில் ஒரு நீண்ட போராட்டத்திற்கு தமிழர்கள் தயாராக வேண்டும். அது ஒன்றுதான் எஞ்சியுள்ள ஒரே வழி. அந்த வகையில் அமெரிக்கா எந்த நோக்கத்தில் இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்திருந்தாலும் இதனை வரவேற்கத்தான் வேண்டும்.

அமெரிக்க நாட்டின் ஏகாதிபத்திய சுயநலமும் தமிழர்களின் நீதிக்கான வேட்கையும் ஏதேனும் ஒரு புள்ளியில் இணைந்துதான் ஆகவேண்டும். இது முரண்பாடாகத் தோன்றினாலும் வேறு வழி எதுவும் இல்லை.


3 கருத்துகள்:

முரளிதீர தொண்டைமான் சொன்னது…

என்ன செய்வது தமிழர்கள் விரைவாக சிந்திக்கவேண்டிய தருணமிது..

மருத்துவர் அய்யா அவர்கள் தனி தமிழ்நாடு கேட்டு போராடும் நிலைக்கு இந்த திராவிட கட்சிகளும் கொள்ளைக்க்காரி சோனியாங்ரஸும் சேர்ந்து கூட்டு சதி செய்துகொண்டிருக்கின்றார்கள் தொடர்ந்து தமிழர்களுக்கும் தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிராக.

அய்யகோ! என் அருமை தமிழ் மக்களே! இனியும் உறங்காதீர்கள் திராவிட குள்ளநரிகளின் நரித்தனத்தில் மயங்காதீர்கள்!

அன்பு துரை சொன்னது…

@முரளிதீர தொண்டைமான் : இவ்ளோ நடந்ததுக்கு அப்புறமும் தமிழ்நாடு இந்தியாவுலதான் இருக்குனு நெனச்சிகிட்டு இருக்கீங்க பாத்தீங்களா..!! உங்களோட நம்பிக்கையை நான் பாராட்டுறன்..

தமிழ்நாடு இந்தியா என்கிற நாட்டின் அடிமை நாடாக இருக்கிறது..!!

தெரிஞ்சிக்கோங்க..!!

Unknown சொன்னது…

nice analysis. உடலில் இருந்து உதிரும் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட இந்திய அரசில் தமிழர்களுக்கு இல்லை.