Pages

ஞாயிறு, மார்ச் 10, 2013

ஐநாவில் தீர்மானம்: இந்தியாவின் மூக்கை உடைத்த அமெரிக்காவும் தமிழ்நாட்டு அமைப்புகளின் குழப்பமும்!

"இலங்கை மீது ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தில் ஒன்றுமேயில்லை. ஈழத்தமிழ் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவும், ஈழ இனப்படுகொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் வேண்டும்" என்கிற கோரிக்கை தற்போது தமிழ்நாட்டில் எழுந்துள்ளது.

"இனப்படுகொலை விசாரணை, தமிழ் ஈழத்துக்கான வாக்கெடுப்பு" என்கிற கோரிக்கைகளில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அமெரிக்காவின் தீர்மானத்தில் ஒன்றுமே இல்லை என்று சொல்வது தேவையற்றது.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் 
துணைவலியும் தூக்கிச் செயல் - என்றார் திருவள்ளுவர்.

(செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்) - இதனை இந்த நேரத்தில் தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கை மிகப் பலமான நிலையில் இருக்கிறது. இந்தியா என்கிற தெற்காசியாவின் வல்லரசு அதற்கு உற்ற தோழனாக நிற்கிறது. உலகின் முன்னணி கம்யூனிச நாடுகளும் இசுலாமிய நாடுகளும் இலங்கைக்கு பலமாக நிற்கின்றன. 

கம்யூனிச சித்தாந்தத்தை முழுவதாகவோ அல்லது ஓரளவுக்கோ ஏற்கும் கியூபாவும் சீனாவும் இலங்கையைக் காப்பதற்காக மல்லுகட்டுகின்றன. (நல்லவேளையாக அவை இப்போது மனித உரிமைகள் அவையில் உறுப்பினராக இல்லை). இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், இந்தோனேசியா, ஈரான் ஆகியவை அமெரிக்க தீர்மானத்துக்கு தீவிரமாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன. மலேசியாவும் அதே நிலைபாட்டை எடுக்கக் கூடும்.

எப்பாடுபட்டாவது, இந்த தீர்மானத்தை தோற்கடிக்கவோ அல்லது நீர்த்துப் போக செய்யவோ இந்தியா தீவிரமாக சதி வேலையில் இறங்கியுள்ளது.

தமிழரின் நிலை என்ன?

இலங்கையின் வலுவான நிலைக்கு மாறாக தமிழர்கள் பரிதாபகரமான நிலையில் உள்ளனர். தனக்கென பேசுவதற்கு ஒரு நாடும் இல்லாத கையறு நிலையில் தமிழர்கள் உள்ளனர்.

வாட்டிகன் நகர் எனப்படுகிற 'ஹோலி சீ' நாட்டின் மொத்த மக்கள் தொகை வெறும் 832 பேர் மட்டும்தான். அவ்வாறே, லீக்டன்ஸ்டைன் எனும் நாட்டின் மக்கள் தொகை 35 ஆயிரம் பேர் மட்டும்தான். இந்த நாடுகளுக்கு இருக்கும் வாய்ப்பும் முக்கியத்துவமும் கூட ஒன்பது கோடி தமிழர்களுக்கு இல்லை. 

தமிழர்களுக்கென்று ஒரு நாடும் இல்லை (இந்தியா எதிரியின் ஆதரவு நாடு). அதனால்தான் தமிழர்களின் மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே உள்ள சிங்களர்களால் தமிழர்களைக் கொன்று குவிக்கவும் அடக்கி ஒடுக்கவும் முடிகிறது.

அமெரிக்க தீர்மானத்தை வரவேற்போம்

"இனப்படுகொலை விசாரணை, தமிழ் ஈழத்துக்கான வாக்கெடுப்பு" என்பனவெல்லாம் ஒரே நாளில் அடையக்கூடிய இலக்குகள் இல்லை. படிப்படியாகத்தான் அதை நோக்கி முன்னேற வேண்டும். அதற்கான ஒரு படிக் கல்லாகத்தான் அமெரிக்க தீர்மானத்தை பார்க்க வேண்டும். (அதிலும் பொது  வாக்கெடுப்பு போன்ற கோரிக்கைகள் - ஐநா மனித உரிமைக் குழுவால் மட்டுமே முடியக் கூடியனவும் அல்ல. அதற்கு ஐநா பாதுகாப்பு சபையின் ஆதரவு வேண்டும். அங்கு தமிழர்களின் எதிரிகளான சீனாவும் ரசியாவும் வீட்டோ அதிகாரத்துடன் உள்ளனர்)

கடந்த 2009 ஆம் ஆண்டில் இந்தியா, கியூபா உள்ளிட்ட நாடுகள் "விடுதலைப் புலிகளை ஒழித்ததற்காக இலங்கையைப் பாராட்டி" ஐநா மனித உரிமைகள் அவையில் தீர்மானம் கொண்டுவந்தன. அந்த நிலைமை இன்று தலைகீழாக மாறி - இலங்கையைக் கண்டித்து தீர்மானம் வருகிறது. இது முன்னேற்றம் இல்லையா?

அமெரிக்காவின் மீது தமிழர்களுக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், ஈழத்தமிழர் விடயத்தில் அது நமது நட்பு நாடுதான்.

தமிழர்கள் எப்போதும் கியூபாவுக்கு ஆதரவான நிலையில்தான் இருந்தனர். இன்றைக்கும் தமிழ்நாட்டு இளைஞர்கள் செ குவேராவையும் பிடல் காஸ்ட்ரோவையும் தமது சட்டையில் பொறித்துக் கொள்கிறார்கள். ஆனால், கியூபா நமது மனித உரிமையை மதித்ததா? தமிழர்கள் எப்போதுமே இஸ்லாமியர்களுக்கு நண்பர்கள்தான். ஆனால், இஸ்லாமிய நாடுகள் நமது உரிமைகள் அங்கீகரித்தனவா? (இப்போதும் - இலங்கை மீதான தீர்மானத்தை எதிர்க்கும் தமிழ்நாட்டு அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒன்று மட்டும்தான்)

இந்தியாவின் மூக்கை உடைத்த அமெரிக்கா

கடந்த 2012 ஆம் ஆண்டில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தில் கடைசி நேரத்தில் திருத்தம் செய்து இலங்கையைக் காப்பாற்றியது இந்தியா. இந்த முறை சற்று பலவீனமான ஒரு தீர்மானத்தை முதலில் கசியவிட்டது அமெரிக்கா.

உடனடியாக - பலவீனமான இந்த தீர்மானத்தை இலங்கை தானாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் ஐநா வாக்கெடுப்பையும், சர்வதேச அவமானத்தையும் இலங்கை சமாளித்து விடலாம என்று ஆலோசனை சொன்னது இந்தியா.
இதற்காக இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டெசில்வா புதுதில்லிக்கு வந்தார். அமெரிக்காவிடம் பேசி அந்த தீர்மானத்தை மேலும் பலவீனமாக்கி, ஏற்றுக் கொள்வதாக நாடகமாடி, பின்னர் அதைச் செய்தோம் இதைச் செய்தோம் என்று ஏமாற்றலாம் என சதி செய்தனர். ராஜபக்சேவே ஜெனீவாவுக்கு போகவேண்டும் என்று திட்டம் தீட்டப்பட்டது. இலங்கையின் தூதுவர்கள் அமெரிக்காவுக்கும் சென்றதாகக் கூறப்பட்டது, இந்திய வெளியுறவுத்துறையின் ஆசியுடன் சுப்பிரமணிய சாமியும் அமெரிக்காவுக்கு சென்றார்.

சுதாரித்துக் கொண்ட அமெரிக்கா, தீர்மானத்தை சற்று கடினமானதாக மாற்றியது. "இலங்கை மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும்" என்கிற ஐநா மனித உரிமைகள் ஆணையரின் கோரிக்கையை நேரடியாக தீர்மானத்தின் செயல்பாட்டு பகுதியில் (operational part) சேர்த்தது. கூடவே, அவரது பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்ற வாசகத்தையும் இணைத்தது. "ஐநா மனித உரிமை சிறப்பு விசாரணை வல்லுநர்கள் (UN Special Rapporteurs) இலங்கைக்கு செல்ல வேண்டும். அவர்களை தங்குதடையின்றி அனுமதிக்க வேண்டும்" என்கிற கட்டாயத்தை வலியுறுத்தியது.

முதலில் ஒருவருடத்திற்கு பின்னர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற வார்த்தையை மாற்றி - அடுத்த ஆறு மாதத்தில் ஒரு இடைக்கால அறிக்கையும், ஒரு வருடத்தில் முழு அறிக்கையும் மனித உரிமைக் குழுவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
அதாவது, தீர்மானத்தை "இலங்கை தானாகவே ஏற்றுக் கொள்ள வாய்ப்பே இல்லை" என்கிற நிலையை உருவாக்கிவிட்டது அமெரிக்கா. அந்த வகையில் அமெரிக்க வெளியுறவு வல்லுநர்கள் தாங்கள் இந்திய வெளியுறவுத் துறையினரை விட புத்திசாலிகள் என மெய்ப்பித்து விட்டனர்.

இதனால்தான் - முதலில் அமெரிக்க தீர்மானத்தை ஏற்று இந்தியா வாக்களிக்கும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார் (Manmohan Singh had promised to support the US resolution against Sri Lanka). பின்னர், தீர்மானத்தை பார்த்த பின்னர்தான் முடிவு செய்வோம் என்று பல்டியடித்தார் (India will take steps based on what kind of resolutions comes in the UN HRC).

இனி என்ன?

"ஒன்றுமே இல்லாத நிலையில் இப்படியான தீர்மானங்களாவது வருவது வரவேற்கத்தக்கதே" என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கூறியுள்ளது. இதுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் நிலைபாடாக இருக்க வேண்டும். அமெரிக்காவின் இந்த தீர்மானம் கூட பல தமிழ் செயல்பாட்டாளர்களின் அயராத முயற்சியின் விளைவாகவே வந்துள்ளது. இந்த சிறிய வெற்றியைக் கொண்டாடுவதன் மூலமே அடுத்த வெற்றியை நோக்கிப் பயணிக்க வேண்டும்.

அமெரிக்கா எந்த சுயநலத்தின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை முன்வைத்தாலும் அதைப்பற்றி நாம் கவலை கொள்ள தேவையில்லை. அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை இலங்கை எதிர்க்கிறது. ராஜபக்சே எதிர்க்கிறான். இது ஒன்றே நாம் அமெரிக்காவை ஆதரிக்கப் போதுமானதாகும். இந்த தீர்மானத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவது என்பதே தமிழ் மக்களின் முன் உள்ள உடனடிக் கடைமை.

தமிழர்களின் நண்பன் - அமெரிக்கா வாழ்க!

தொடர்புடைய சுட்டிகள்:

1. அவசரம்: ஐநாவில் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டது இலங்கை மீதான அமெரிக்கத் தீர்மானம்- இதோ நகல் -இனியும் இந்தியா மவுனம் காக்குமா?

2. டெசோ: கலைஞருக்கு துணிச்சலும் மனசாட்சியும் உண்டா? பாவத்தைக் கழுவ ஒரு கடைசி வாய்ப்பு!

3. ஐநாவில் இலங்கை போர்க்குற்றம்: இந்திய அநீதிக்கு ஒரு முடிவே இல்லையா? உதிரும் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட இந்தியாவில் தமிழர்களுக்கு இல்லை!

4. இந்திய பிரதமருக்கே தெரியாத அமெரிக்க தீர்மானம் இதுதான்! இதனை இன்னும் பலவீனமாக்க இந்திய அரசு துடிப்பது ஏன்?

5. இலங்கை - போர்க்குற்ற விசாரணை: ஐ.நாவில் பசுமைத் தாயகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!

2 கருத்துகள்:

புரட்சி தமிழன் சொன்னது…

தமிழர்கள் ஒன்றுபட்டு தீர்மானத்தினை இந்தியா ஆதரிக்க வற்புறுத்துவோம்.

எழிலன் சொன்னது…

இலங்கையரசின் அதிதந்திர அரசியலான தமிழர்களின் விடுதலை வேட்கை யையும் அதன் காவலர்களாகிய விடுலைப் புலிகளையும் பயங்கரவாதப் பொய்யொட்டியுடனிணைத்து உலகை நம்ப வைத்த கபடத்தனத்தின் வெற்றிதான் இன்றைய உலக நாடுகளின் சகல நடவடிக்கைகளுக்கும் அடிப்படை என்பதை நினைவில் வைத்து
உலகை நாமும் புலிகளும் பயங்கரவாதிள்தானா என்பதைச் சரியாக சரித்திர அடிப்படையில் ஆய்ந்து முடிவெடுக்க வைப்பதில் வெற்றி கண்டே ஆகவேண்டும். அதுவரையில்நமது ல்லா நியாயங்களையும் பயங்கரவாத குப்பைக் கூடைக்குள்ளேதான் போட்டுவிட முயன்று கொண்டிருப்பார்கள்.
எழிலன்