Pages

செவ்வாய், செப்டம்பர் 17, 2013

சமூகநீதிப் போராளிகளின் வீரத் தியாகம் 17.09.1987

தன்னலமற்ற தியாகம்

1987 ஆம் ஆண்டு - வன்னியர் உட்பட அனைத்து சாதியினருக்கும் சாதிவாரி மக்கள்தொகைக்கேற்ப இடஒதுக்கீடு கேட்டு செபடம்பர் 17, தந்தை பெரியார் பிறந்த நாள் முதல், ஒருவார கால சாலமறியலை அறிவித்தது, மக்கள் காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் நிறுவப்பட்ட வன்னியர் சங்கம்.

இந்த சமூகநீதிப் போரில் 21 பேர் உயிரிழந்தனர், ஒரு லட்சம் பேர் சிறைக்கு சென்றனர், பல்லாயிரக் கணக்கானோரின் வீடுகளும், உடைமைகளும் காவல்துறை வெறியாட்டத்தில் பாழாக்கப்பட்டன.
சமூகநீதிப் போராளிகளுக்கு நினைவஞ்சலி 17.09.2013
சமூகநீதிக்கான போராட்டத்தில் உயிர்நீத்தவர்கள் அதிகம் படிப்பறிவில்லாத ஏழைகள். அவர்களது குடும்பத்தினரும் கூட குறிப்பிடத்தக்க அளவுக்கு கல்வித்தகுதி பெற்றவர்கள் இல்லை. 20 சதவீத இட ஒதுக்கீட்டால் உயர்க்கல்வியையோ, அரசு வேலை வாய்ப்பையோ பெரும் அளவுக்கு இவர்களது குடும்பங்களில் தகுதிபெற்றவர்கள் பெரிதாக இருக்கவில்லை. 

ஆனாலும், தம்மைப்போன்று எதிர்கால தலைமுறை வன்னியர்கள் வாழ்விழந்து போய்விடக் கூடாது என்கிற நோக்கில்தான் - கண்காணாத, இன்னும் பிறக்காத எதிர்காலத் தலைமுறையினருக்காக இவர்கள் சாலைமறியல் போரில் பங்கேற்றனர், உயிர்த்தியாகம் செய்தனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் - கல்வி அல்லது வேலை வாய்ப்புகளைப் பெற்று இன்று பல பதவிகளிலும் பலநாடுகளிலும் நல்ல நிலையில் இருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வளித்தது இந்த தன்னலமற்ற தியாகம்தான்.

திமுகவின் சதி

சாலை மறியல் நடத்துவதாக மூன்று மாத காலத்திற்கு முன்னறே அறிவிப்பு செய்து, நாடெங்கும் விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஆனால், செப்டம்பர் 16 அன்று அண்ணா அறிவாலயம் திறக்கப்படும் என தாமதமாக அறிவித்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி.

அதாவது, செபடம்பர் 17 அதிகாலை 12 மணி முதல் மறியல் நடத்துவதாக வன்னியர் சங்கம் முன்பே கூறியிருந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அதே செபடம்பர் 16 இரவு சென்னையில் அறிவாலயம் திறப்புவிழா நடத்தி, செபடம்பர் 17 அதிகாலை 12 மணிக்கு மேல் தென்மாவட்ட திமுகவினர் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை கடக்கும் வகையில் - சதி செய்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி.

வன்முறையில் ஈடுபடுவதற்கு அணியமாக ஆயுதங்களுடன் வந்த குண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த வன்னியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதுதான் இட ஒதுக்கீட்டு போரில் 21 பேர் உயிரிழக்கவும், ஒரு லட்சம் பேர் சிறைக்கு செல்லவும், பல்லாயிரக் கணக்கானோரின் வீடுகளும், உடைமைகளும் காவல்துறை வெறியாட்டத்தில் பாழாக்கப்படவும் காரணமான முதல் நடவடிக்கையாகும்.

வன்னியர் சங்கத்தின் நியாயமான போராட்டத்தில் - வன்னியர்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 21 பேர் உயிரிழப்பு, ஆயிரக்கணக்கானோர் படுகாயம், லட்சம் பேர் சிறை, பல ஆண்டுகள் வழக்கு, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் உடமை இழப்பு - என ஏராளமான இழப்புகளை வன்னியர்கள் சந்தித்தார்கள். இந்தத் தியாகத்தால் இன்று தமிழ்நாட்டில் 107 சாதியினர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டைப் பெறுகின்றனர்.
தியாகிகள் குடும்பத்தினருடன் மருத்துவர் அய்யா 17.09.2013

திமுக குண்டர்கள், காவல்துறை வன்முறையாளர்களின் கொலைவெறியாட்டங்கள் தமிழ் மக்களின் நினைவலைகளில் இருந்து மறைந்து விட்டன. ஆனால், தமது உயிரைக் காப்பாற்ற வேண்டும், உடமைகளைப் பாதுகாக்க வேண்டும், காவல்துறையினர் துப்பாக்கிகளோடு ஊருக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக, சிலநூறு மரங்களை வெட்டி, சாலையில் தடுப்பை ஏற்படுத்தியதற்காக - வன்னியர்கள் இன்றும் 'மரம் வெட்டிகள்' என்று ஆதிக்கச் சாதிக் கூட்டத்தினரால் தூற்றப்படுகின்றனர்.

வன்னியப் போராளிகளின் அந்த மாபெரும் தியாகம் நிகழ்ந்து 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அந்த 21 தியாகிகளை நினைவு கூறுவோம்.

வீரவணக்கப்பாடல் - காணொலி 1 : http://youtu.be/y-LWf2wBcR8
1. தியாகி பார்ப்பனப்பட்டு ரங்கநாதக் கவுண்டர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டிக்கு அருகில் உள்ள பார்ப்பனப்பட்டுக் கிராமத்தை சேர்ந்த தியாகி. சாலை மறியலுக்காக வீட்டைவிட்டுக் கிளம்பும் போதே காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது அவரின் வயது 55.

2. தியாகி சித்தணி ஏழுமலை
விழுப்புரம் மாவட்டம் சித்தணி கிராமத்தை சேர்ந்தவர். விழுப்புரம் மாவட்டம்  வீடூர் அணை அருகே, சாலை மறியலில் ஈடுபட்ட போது காவல்துறையினரால் சுடப்பட்டார். அப்போது அவருக்கு வயது 25 க்கும் கீழ். காலவல் துறையினர் உரிய சிகிச்சை அளிக்காமல் அலைகழித்ததால் அடுத்த நாள், செப்டம்பர் 18 அன்று வீரமரணம் அடைந்தார். திருமணமானவர்.

3. தியாகி ஒரத்தூர் செகநாதன்
விழுப்புரம் மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்தவர். திருமணமானவர். சாலை மறியலில் ஈடுபட்ட போது காவல்துறையினரால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார்.

4. தியாகி முண்டியம்பாக்கம் சிங்காரவேலு

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர். முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்தவர். திருமணாமானவர். விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் அருகே, சாலை மறியலில் ஈடுபட்ட போது காவல்துறையினரால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 43.

5. தியாகி கயத்தூர் முனியன்
விழுப்புரம் மாவட்டம் கயத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். திருமணமானவர். பார்ப்பனப்பட்டு துப்பாக்கிச்சூடு நிகழ்வைக் கேள்விப்பட்டு, ஊர்வலமாக தலைமையேற்று சென்றவர். விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் அருகே காவல்துறையினரால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 27. அவரது மனைவி வேதவல்லி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

6. தியாகி கயத்தூர் முத்து

விழுப்புரம் மாவட்டம் கயத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். திருமணமாகாதவர். விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் அருகே காவல்துறையினரால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார்.

7. தியாகி கொழப்பலூர் முனுசாமிக் கவுண்டர்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கிராமத்தை சேர்ந்தவர்.சாலைமறியலில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டு, காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். சென்னை மத்திய சிறையிலேயே வீரமரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 45. திருமணமானவர்.

8. தியாகி கோலியனூர் விநாயகம்.
விழுப்புரம் மாவட்டம் மிளகாய்க் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர். செப்டம்பர் 17 அன்று கும்பகோணம் - சென்னை, பாண்டி - விழுப்புரம் நான்குமுனை சந்திப்பான கோலியனூர் கூட்டுச்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டார். இவருடன் சேர்த்து கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் வேலு ஆகிய மூன்று பேரும் வீரமரணம் அடைந்தனர்.

9. தியாகி கோலியனூர் கோவிந்தன்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கிராமத்தை சேர்ந்தவர். செப்டம்பர் 17 அன்று கும்பகோணம் - சென்னை, பாண்டி - விழுப்புரம் நான்குமுனை சந்திப்பான கோலியனூர் கூட்டுச்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டார். இவருடன் சேர்த்து கோலியனூர் விநாயகம், கோலியனூர் வேலு ஆகிய மூன்று பேரும் வீரமரணம் அடைந்தனர். திருமணமானவர். அப்போது அவருக்கு வயது 35.

10. தியாகி தொடர்ந்தனூர்  வேலு.

செப்டம்பர் 17 அன்று கும்பகோணம் - சென்னை, பாண்டி - விழுப்புரம் நான்குமுனை சந்திப்பான கோலியனூர் கூட்டுச்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டார். இவருடன் சேர்த்து கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம் ஆகிய மூன்று பேரும் வீரமரணம் அடைந்தனர்.  திருமணமானவர்.

11. சிறுதொண்டமாதேவி தேசிங்குராஜன்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள சிறுதொண்டமாதேவி ஊரில் 13.4.1967 இல் பிறந்தவர் தேசிங்குராஜன். அப்பா துரைசாமி படையாட்சி, அம்மா கருப்பாயி.
1987 சாலைமறியல் போராட்டத்தின்போது செப்டம்பர் 18 முதல் 21 வரை முந்திரிக்காட்டில் இருந்து சாலைகளில் தடைகளை ஏற்படுத்தினார். 22 ஆம் நாளன்று காவல்துறை பாதுகாப்புடன் பண்ருட்டியில் இருந்து நெய்வேலிக்கு வாகனங்கள் செல்வதாக செய்தி வந்தது. இதனால், நெய்வேலி கொள்ளுக்காரன்குட்டை கிராமத்தின் அருகே 'டாக்டர் அய்யா சொல்லும் வரை நாங்கள் உயிரே போனாலும் வாகனங்கள் செல்ல அனுமதிக்க மாட்டோம்' எனக்கூறி காவல்துறை பாதுகாப்புடன் வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினார் தேசிங்குராஜன்.

முன்று மனிநேரம் போராடிப் பார்த்த காவல்துறையினர் சுட்டுவிடுவோம் என துப்பாக்கியை நீட்டி குறிபார்த்தபோது - மார்பை திறந்துகாட்டி வயிற்றில் சுடப்பட்டு உயிரிழந்தார் மாவீரன் தேசிங்குராஜன்.

12. பேரங்கியூர் அண்ணாமலைக் கவுண்டர்
திருவெண்ணை நல்லூர் கிராமத்தின் அண்ணாமலைக் கவுண்டர் 60 வயது முதியவர். சாலைமறியல் போராட்டத்தில் பேரங்கியூர் மக்கள் தீவிரமாக ஈடுபட்டதால் - காவல்துறை ஐஜி ஸ்ரீபால் தலைமையில் காவல்துறையினர் ஊருக்குள் புகுந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதில் முதியவர் அண்ணாமலைக் கவுண்டர் உயிர்த்தியாகம் செய்தார்.

13. மேச்சேரி அமரத்தானூர் மயில்சாமி
சேலம் மாவட்டம் மேச்சேர் அமரத்தானூர் ஊரைச் சேர்ந்தவர் மயில்சாமி. குஞ்சாண்டியூர் டிசிஎம் மில்லில் வேலைசெய்தார். 18.9.1987 அன்று மேட்டூர் - மேச்சேரி சாலையில் நடந்த சாலைமறியலில் பங்கேற்று சாலையை மறித்தபோது காவல்துறையினரால் சுடப்பட்டார். தலையில் குண்டுக்காயம பட்ட மயில்சாமியை காவல்துறையினர் பொட்டனேரி கிராமத்தில் உள்ள கிணற்றில் தூக்கி வீசினர். மறுநாள் இவரது உடைலைக் கைப்பற்றிய காவல்துறையினர் அவர்களாகவே அடக்கம் செய்தனர். உறவினர்கள் கூட இவரது உடைலைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

14. வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன்
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் உள்ள வெளியம்பாக்கம் எனும் ஊரைச் சேர்ந்தவர் 25 வயதான இராமகிருஷ்ணன். தொழுப்பேடு எனுமிடத்தில் சாலைமறியலில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டார். விடுதலையான சிறிது காலத்தில் சிறைக் கொடுமை பாதிப்புகளால் இறந்துபோனார்.

15. சிவதாபுரம் குப்புசாமி

சேலம் மாவட்டம் சிவதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி, வயது 46. தொடக்க காலம் முதலே வன்னியர் சங்கத்தில் ஈடுபாட்டுடன் இருந்தவர். சாலைமறியலில் ஈடுபட்டதால் 21 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையான சிறிது காலத்தில் சிறைக்கொடுமை பாதிப்புகளால் இறந்துபோனார்.

16. முரசவாக்கம் கோவிந்தசாமி 

காஞ்சிபுரம் மாவட்டம்.

17. குருவிமலை முனுசாமி நாயக்கர்

காஞ்சிபுரம் மாவட்டம்.

18. காயிரம்பேடு மருதசாமி  

காஞ்சிபுரம் மாவட்டம்.

19. நத்தமேடு சுப்பிரமணி 

தருமபுரி மாவட்டம்

20. விளம்பூர் பன்னீர்செல்வம்

காஞ்சிபுரம் மாவட்டம்.

21. பாப்பனம்பட்டு வீரப்பன்

விழுப்புரம் மாவட்டம்

22. பாப்பனம்பட்டு பரமசிவம்

விழுப்புரம் மாவட்டம்

23. கயத்தூர் தாண்டவராயன்

விழுப்புரம் மாவட்டம்

வீரவணக்கப்பாடல் - காணொலி 2: http://youtu.be/u2T29VxTGT0
குறிப்பு: 

1. முதலில் 21 பேர் வீரமரணம் அடைந்ததாகக் கருதப்பட்டது. ஆனால், உண்மையில் 23 பேர் வீரமரணம் எய்தியதாக பின்னர் தெரிய வந்தது.

1 கருத்து:

Unknown சொன்னது…

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதி சான்றிதழில் வன்னியர்களின் குருதிக்கரை படிந்திருக்கிறது