Pages

சனி, ஜூன் 28, 2014

ஐநா விசாரணை: பயத்தில் ராஜபக்சே கும்பல்!

இலங்கையில் நடந்த கொடூரங்கள் தொடர்பான ஐநா விசாரணை, இலங்கையின் சர்வதேச குற்றவாளி ஆட்சியாளர்களுக்கு பயமளிக்கும் வகையில் தொடங்கியுள்ளது. 
மார்ட்டி அடிசாரி, சில்வியா கார்ட்ரைட், அஸ்மா ஜகாங்கீர்
நவநீதம் பிள்ளை அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர்களே அந்த பயத்திற்கு காரணம்:

1. மார்ட்டி அடிசாரி: 

பின்லாந்து முன்னாள் அதிபரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான இவர் தலையிட்ட பல பிரச்சினைகளில் புதிய நாடுகளை உருவாக்கியுள்ளார்.

நமீபியா விடுதலை பெறக் காரணமானவர். இந்தோனேசியாவில் ஆச்சே சர்ச்சையில் தலையிட்டு, சுதந்திர மாகாணம் உருவாக வழிவகுத்தவர். செர்பியாவிடமிருந்து கொசாவோ நாட்டைப் பிரித்தவர் இவர்தான். 

இலங்கைச் சிக்கலை சர்வதேச அரங்கில் பிரச்சாரம் செய்துவரும் 'இன்டர்நேஷனல் க்ரைசிஸ் குழுவின்' (ICG) தலைவராகவும் இவர் இருந்துள்ளார்.

2. சில்வியா கார்ட்ரைட்:

நியூசிலாந்து முன்னாள் கவர்னர் ஜெனரல் மற்றும் கம்போடிய இனப்பெடுகொலை நீதிமன்ற நீதிபதி.

3. அஸ்மா ஜகாங்கீர்:

பாகிஸ்தான் மனித உரிமை ஆணைய முன்னாள் தலைவர். மதச்சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் உரிமைக்காகப் போராடியவர். மத அடிப்படைவாதிகளின் எதிர்ப்புக்கு ஆளானவர். அரசால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டவர். ஐநா மனித உரிமை ஆணையத்தில் "அரசாங்கத்தின் சட்டவிரோத படுகொலைகள்" மற்றும் "மதச்சுதந்திரம்" தொடர்பான சிறப்பு விசாரணை அதிகாரியாக பணியாற்றியவர் (UN Special Rapporteur on Extrajudicial, Arbitrary and Summary Executions. UN Special Rapporteur on Freedom of Religion and Belief).

(இலங்கை மீதான விசாரணைக் குழுவில் ஆசிய நாட்டவர்கள் யாரும் இடம்பெற ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்கிற இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடித்து, ஐநாவில் இலங்கையைக் காப்பாற்றும் பாகிஸ்தானில் இருந்தே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்).

4. சான்ட்ரா பெய்தாஸ்

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனிதஉரிமை அமைப்பில் பணியாற்றி, பின்னர் ஐநாவில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றும் சான்ட்ரா பெய்தாஸ் இலங்கை மீதான ஐநா விசாரணைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த சான்ட்ரா பெய்தாஸ் சூடான் நாட்டின் மீதான விசாரணை ஆணையம், நேபாளத்தின் மீதான ஐநா மனித உரிமைக் கண்காணிப்புக் குழு உள்ளிட்டவற்றிலும் பணியாற்றியவராகும்.

5. இளவரசர் செயித் ராத் செயித் உசேன்.

நவநீதம் பிள்ளைக்கு அடுத்ததாக ஐநா மனித உரிமை ஆணையத்தின் தலைமை பதவிக்கு வரவுள்ளார் ஜோர்டன் இளவரசர் செயித் ராத் செயித் உசேன். இலங்கை மீதான ஐநா விசாரணைக் குழுவின் அறிக்கையை ஐநா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப் போகிறவர் இவர்தான்.
ஜோர்டன் இளவரசர் செயித் ராத் செயித் உசேன்
இவர் ஏற்கனவே இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தவர். ராஜபக்சே கும்பலைச் சேர்ந்த போர்க்குற்றவாளி சாவேந்திர டிசில்வா என்பவர் ஒரு ஐநா அதிகாரியாக நியமிக்கப்பட்ட போது அதனை இவர் எதிர்த்துள்ளார். இவரைச் சந்திக்க ராஜபக்சே ஜோர்டன் நாட்டுக்கு நேரடியாக சென்ற போதும், ராஜபக்சேவைச் சந்திக்க மறுத்துள்ளார்.

இவர் போர்க்குற்றங்கள் தொடர்பான ரோம் உடன்படிக்கையின் கீழ் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ICC) நிறுவக் காரணமானவர்களில் ஒருவரும், அதன் முதல் நிருவாகக் குழுத் தலைவராக இருந்தவரும் ஆவார். இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்த சர்வதேச நெறிமுறைகள் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய இவர் சர்வதேச சட்டங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவர்.

ஐநா படைகளின் பாலியல் குற்றங்கள் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த குழுவிற்கும் இவர் தலைமையேற்றிருக்கிறார்.

கடந்த 2000 ஆவது ஆண்டு முதல் இவர் ஐநா அவை நடவடிக்கைகளில் முன்னணியில் பணியாற்றி வருகிறார். அதற்கு முன்பு யூகோசுலோவியா நாட்டின் இனப்படுகொலை தொடர்பான ஐநா அமைதிப்படையில் பணியாற்றியுள்ளார்.

- மார்ட்டி அடிசாரி, சில்வியா கார்ட்ரைட், அஸ்மா ஜகாங்கீர், சான்ட்ரா பெய்தாஸ், இளவரசர் செயித் ராத் செயித் உசேன் - என்கிற சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட, நம்பிக்கை அளிக்கும் அணியினர், ராஜபக்சேவை தூக்கமில்லாமல் செய்யப்போவது உறுதி.

தாமதம் ஆகலாம், ஆனால், நீதி ஒருநாள் வென்றே தீரும்!

கருத்துகள் இல்லை: