Pages

வியாழன், மார்ச் 31, 2016

பிச்சை போடும் பிரேமலதா குடும்பம்; கை ஏந்தி நிற்கும் வைகோ, கொம்யூனிஸ்ட் கும்பல்!

ம.ந.கூட்டணி என்று துவக்கப்பட்டதும், தேதிமுக – ம.ந.கூட்டணி என ஒப்பந்தம் செய்யப்பட்டதும், விஜயகாந்த் துணைவியார் அறிவித்தது போல், கிராம மக்களுக்கு புரியும் வகையில் கே.கூ. அதாவது கேப்டன் விஜயகாந்த் அணி என்றும், அந்த அணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் என்றும், கே.கூ.அணியின் ஒட்டு மொத்த அமைப்பாளர் வைகோ பத்திரிக்கையாளர் முன்னிலையில் தெளிவுபடுத்தினார்.
தற்போது, இந்த அணியின் துணை முதல்வர் வைகோ என்றும், நிதி அமைச்சர் திருமா என்றும், மற்றும் காம்ரேட்கள் ராமகிருஷ்ணன், முத்தரசனுக்கும் அமைச்சர் பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற ஜன நாயகத்தில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு என்பதே அதிகப்பட்ச செயல் என்று பலராலும் சொல்லப்பட்ட நிலையில், இன்னும் வேட்பு மனு தாக்கல் செய்யாமலேயே, முதல்வர் வேட்பாளர் என்பதையும் தாண்டி, அடுத்து உள்ள அமைச்சர் பதவிகளுக்கும் பெயர்களை அறிவித்து இருப்பது உலக அரசியல் வரலாற்றில் கே.கூ.அணியாகத்தான் இருக்கும். இதுவும் பெரிய மாற்றம்தான்.

சரி. இந்த அறிவிப்பை செய்தவர் யார்? முதல்வர் வேட்பாளர் விஜயகாந்தா? இல்லை. அவர் வீட்டில் அமர்ந்து முதல்வர் பதவியில் என்ன என்ன சாதிக்கலாம் என்று திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்.

பிறகு, அமைப்பாளர் வைகோவா என்றால் பாவம் அவர் மேடைக்கு மேடை வீரவசனம் பேசுகிறார்; தற்போது ஊடகம் என்றால் சற்று கலக்கமாக இருக்கிறது என்கிறார்; அவர்களுக்கு எப்படி பாடம் நடத்துவது என்று தனக்குத் தெரியும் என்றும், ஆனால் சொல்லமாட்டேன் என்று சஸ்பென்ஸ் படம் காட்டுகிறார்.

பிறகு யார் தான் இந்த அமைச்சர் பட்டியலை வெளியிடுவது? கே.கூ.அணியின் முதல்வர் வேட்பாளரின் மனைவியின் தம்பி வெளியிடுகிறார்.
இதை யாரும் குடும்ப அரசியல் என்று கொச்சைப்படுத்த வேண்டாம். கே.கூ.அணியின் அடுத்தக் கட்ட தலைவருக்கு, முதல்வருடன் யார் யாரெல்லாம் அமைச்சர்களாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கும் அதிகாரம் தரப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்ளுங்களேன். இதுவும் பெரிய புரட்சிகர மாற்றம்தான்.

இன்னும் தேர்தலுக்கு ஐம்பது நாட்களுக்கு மேல் உள்ளது. பல புரட்சிகர அறிவிப்புகள் கே.கூ.அணியின் சார்பில் வரக்கூடும். ஆவலுடன் காத்திருப்போம்.
தொடர்புடைய இடுகைகள்:




கருத்துகள் இல்லை: