Pages

புதன், அக்டோபர் 12, 2016

கிணற்றுத் தவளை திருமாவளவனுக்கு, மருத்துவர் அன்புமணி இராமதாசின் சாதனைகள் புரியுமா?

கிணற்றுத் தவளை திருமாவளவனுக்கு, மருத்துவர் அன்புமணி இராமதாசின் சாதனைகள் புரியுமா?
கிணற்றுத் தவளையும், கண்ணை மூடிய பூனையையும்
கலந்து செய்த கலவை திருமாவளவனுக்கு அன்புமணி 
இராமதாசின் அகண்ட மருத்துவ சாதனைகள் புரியுமா?

தமிழ்நாட்டில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கிறார். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் நலம் விசாரித்து வந்திருக்கிறார். இது ஒருபுறம்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர்களாக இருப்பவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனைகளிலேயே மருத்துவம் பெறும் நிலை உள்ளதே.... இதை மாற்றும் வகையில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனை ஒன்றை அமைக்க 50 ஆண்டு கால திராவிட ஆட்சிகள் தவறி விட்டன... இனியாவது அத்தகைய மருத்துவமனை ஒன்றை அமைக்க வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்கள் இன்று (11.10.2016)  அறிக்கை வெளியிட்டிருந்தார். இது நல்ல நோக்கத்துடன் விடுக்கப்பட்ட ஓர் அறிவுரை.

மருத்துவர் அய்யாவின் இந்த அறிக்கை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கருத்துக் கேட்டுள்ளனர். தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனை இல்லை என்பது உண்மை. அந்த உண்மையைத் தான் மருத்துவர் அய்யா அவர்கள் கூறியிருக்கிறார். அதனால் அந்த கேள்விக்கு, "அய்யா அவர்கள் கூறியது சரி தான்’’ என்பதைத் தவிர வேறு பதில் இல்லை.

ஆனால், அய்யா அவர்கள் கூறிய கருத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதையே கொள்கையாக கொண்டவர்களால் அப்படி கூற முடியாது அல்லவா? அதனால் ஏட்டிக்குப் போட்டியாக பதில் கூறும் நோக்குடன்,‘‘அன்புமணி இராமதாசு மத்திய அமைச்சராக இருந்த போது தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை அமைத்திருக்கலாமே... அவர் ஏன் செய்யவில்லை’’ என்று எதிர்கேள்வி எழுப்பியிருக்கிறார் திருமாவளவன். அவருடைய அறிவுத் திறன் புல்லரிக்க வைக்கிறது.

மருத்துவர் அய்யா அவர்கள் விமர்சித்தது திராவிடக் கட்சிகளின் அரசை.... அவர்கள் இப்படி பதில் கூறியிருந்தாலாவது ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், தேசியம், திராவிடம் (மதிமுக தவிர்த்த) இரண்டையும் ஒழிப்போம் என்று கூறி புதிய அணி திரட்டிய திருமாவளவன் ஏன் திடீரென திராவிடக் கட்சிகளுக்கு வக்காலத்து வாங்கி இப்படி ஒரு கேள்வியை முன்வைத்திருக்கிறார்?

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் பி அணியாக செயல்பட கோடிகளை வாங்கிக் குவித்ததுடன், அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆளுங்கட்சியின் பெயிட் விருந்தினராக (Paid Guest) சென்று வந்த திருமாவளவனிடம் இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்? வாங்கிய காசுக்கு கூவியிருக்கிறார் ... அவ்வளவு தான் என்று தான் எடுத்துக் கொள்ள முடியும்.

சரி.... திருமாவளவன் கூவுவதெல்லாம் கூவட்டும்... அதை சரியாக கூவக்கூடாதா? மருத்துவர் அய்யா அவர்கள் வெளியிட்ட அறிக்கையை படித்திருந்தாலே அவருக்கு எல்லா உண்மையும் புரிந்து இருக்கும். ஆனால், அறிக்கையையும் படிக்காமல், முழு உண்மையையும் தெரிந்து கொள்ளாமல் வாய்க்கு வந்தபடி உளறிக் கொட்டியிருக்கிறார்.

தமிழகத்திலும், புதுவையிலும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் செய்த மருத்துவப் பணிகள் குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கையில் விரிவாக விளக்கம் அளித்திருக்கிறார். அதன் விவரம் வருமாறு:

‘‘பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது மேற்கு மாவட்ட மக்களின் தேவைக்காக சேலத்தில் ரூ.139 கோடியில் அதிஉயர் சிறப்பு மருத்துவமனையை அமைத்துக் கொடுத்தார். மதுரையில் ரூ.150 கோடியில் எய்ம்சுக்கு இணையான மருத்துவமனை அமைக்க நிதி ஒதுக்கினார். அதைப்பயன்படுத்தி அந்த மருத்துவமனையை உலகத் தரம் கொண்டதாக அமைத்திருந்திருக்கலாம். ஆனால், முன்பிருந்த திமுக அரசும், இப்போதுள்ள அதிமுக அரசும் அவ்வாறு செய்யத் தவறி விட்டன.

எல்லா மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கும் திட்டத்தின்படி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கும் திட்டம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டது. தமிழகத்துடன் அறிவிக்கப்பட்ட மற்ற 4 மாநிலங்களில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழகத்தில் இடம் கூட இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இதற்காக தமிழகம் தேர்வு செய்து வழங்கிய 5 இடங்களையும் மத்திய அரசு நிராகரித்து விட்ட நிலையில் புதிய இடத்தை தேர்வு செய்து வழங்க தமிழக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மருத்துவத்துறை வளர்ச்சியில் தமிழக அரசின் அக்கறை என்ன? என்பதற்கு இதுதான் உதாரணமாகும்’’.

அதுமட்டுமல்ல.... அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனை மேம்படுத்தப்பட்டது குறித்தும் மருத்துவர் அய்யா அய்யா அவர்கள் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்கள்....

‘‘புதுச்சேரியில் 1964-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜிப்மர் எனப்படும்  ஜவகர்லால் நேரு பட்டமேற்படிப்பு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு  மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டதுடன், ரூ.1500 கோடி செலவில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

அதன்பயனாக, 52 ஆண்டு வயதான ஜிப்மர் நாட்டின் மூன்றாவது தலைசிறந்த மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ நிறுவனமாக உருவாகியுள்ளது. மருத்துவ வசதிகள் மற்றும் தரமான சேவையில் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு தனியார் மருத்துவமனையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை நெருங்கக்கூட முடியாது’’

---- இதையெல்லாம் படிக்காமல் தான் திருமாவளவன் உளறியிருக்கிறார்.

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர். அவர் மத்திய அரசின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தான் மருத்துவமனை கட்டவோ, இருக்கும் மருத்துவமனையை மேம்படுத்தவோ முடியும். அதனடிப்படையில் அவர் புதுவையில் ஜிப்மர் மருத்துவமனையை மேம்படுத்தியிருக்கிறார். ஹரியானாவில் எய்ம்ஸ்சின் இரண்டாவது வளாகத்தை அமைத்திருக்கிறார். 

சண்டிகரில் உள்ள பட்டமேற்படிப்பு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை மேம்படுத்தியிருக்கிறார். வடகிழக்கு மாநில மக்களின் வசதிக்காக மேகாலயாத்  தலைநகர் ஷில்லாங்கில் இந்திரா காந்தி வடகிழக்கு மண்டல சுகாதாரம் மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தை (North Eastern Indira Gandhi Regional Institute of Health & Medical Sciences - NEIGRIHMS) விரிவுபடுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் மருத்துவமனை அமைப்பதற்கான நிதியை மட்டுமே அவரால் ஒதுக்கீடு செய்ய முடியும். நேரடியாக குதித்து வந்து மருத்துவமனை அமைக்க முடியாது. அது மாநில அதிகாரத்தில் குறுக்கிடுவதாக அமைந்து விடும். அதன்படி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஒதுக்கிய நிதியில் சேலத்தில் 139 கோடியில் அதிஉயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டிருக்கிறது.  சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு 100 கோடி ஒதுக்கினார். இன்னமும் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டே இருக்கின்றன.

மதுரையில் ரூ.150 கோடியில் எய்ம்ஸ்க்கு இணையான  மருத்துவமனை அமைக்க அன்புமணி இராமதாஸ் ஒதுக்கிய நிதி இன்னும் பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது. அன்புமணி இராமதாஸ் வகுத்துக் கொடுத்த  திட்டத்தின்படி திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய இடங்களிலும் இத்தகைய மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கெல்லாம் மேலாக ரூ.1000 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவற்றையெல்லாம் தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதற்காக தமிழக அரசை விமர்சிக்க துப்பில்லாத திருமாவளவன் மருத்துவர் அன்புமணி இராமதாசிடம் வினா எழுப்பியிருக்கிறார். மக்களவை உறுப்பினராக இருந்த திருமாவுக்கு இவை தெரிந்திருக்க வேண்டும். ஆனால் பாவம் எதுவும் தெரியவில்லை.

கிணற்றுத் தவளைக்கு கிணற்றைத் தவிர வேறு எதுவும் தெரியாது. கண்ணை மூடிய பூனைக்கு இருட்டைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அப்படி இருக்கும் போது இந்த இரண்டும் கலந்த கலவையான திருமாவளவனுக்கு மட்டும் என்ன தெரியும்... அதன் வெளிப்பாடு தான் இந்த உளறல். போய்த் தொலையட்டும்....! விட்டுத் தள்ளுங்கள்!!

கருத்துகள் இல்லை: