Pages

வியாழன், அக்டோபர் 06, 2016

சொந்த சாதியினருடன் - தேசிய இனத்துக்காக சண்டையிடுவது சரிதானா?

தமிழ்த் தேசியம் என்கிற கருத்தியலை வைத்தும், சில நேரத்தில் மதத்தை வைத்தும் ஒரே சாதிக்குள் மோதல்கள் நடப்பதை பார்க்க நேர்கிறது. 

ஒவ்வொரு மனிதனும் தாம் நம்புகிற கருத்தைக் கொண்டிருக்கவும் அதனை வெளிப்படுத்தவும் உரிமை உண்டு. ஆனால், முடிந்தவரை - அதுவும் தேவையற்ற சூழலில் - மாற்றுக்கருத்து கொண்டவர்களை புண்படுத்தும் வகையில் கருத்துகளை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது.

அடையாள அரசியல் எனும் பேராபத்து!

மனிதர்கள் அடையாளங்களுடன் வாழ்கின்றனர். சில அடையாளங்கள் பிறப்பினால் வருகின்றன. சில அடையாளங்கள் நம்பிக்கையால் வருகின்றன. ஒரே நேரத்தில் ஒரே மனிதன் பலவிதமான அடையாளத்துடன் வாழ்கிறான்.  அதாவது, சாதி என்கிற அடையாளம் பிறப்பால் வருகிறது, மொழியின் அடையாளம் தன்னுடைய பெற்றோர் பேசிய மொழியால் வருகிறது. மத அடையாளம் அவரவர் நம்பிக்கையால் வருகிறது. ஒரே நேரத்தில் ஒரே மனிதன் இப்படி பல அடையாளங்களை கொண்டிருக்கிறான்.

மனிதர்கள் அடையாளங்களை கைவிட்டு வாழும் நிலையோ - அல்லது ஒருவர் ஒரு அடையாளத்துடன் மட்டும் இருக்கும் நிலையோ, இனி ஒருகாலத்திலும் வரவே வராது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் சாதி, மதம், இனம், மொழி, அரசியல் கருத்து போன்ற அடையாளங்களில் எந்த ஒன்றையும் ஒழித்துவிடும் சாத்தியம்,  நம்முடைய வாழ்நாளில், இல்லை.

சில நேரங்களில், 'இந்த அடையாளத்துடன் இருப்பவர்கள் மட்டும்தான் இருக்க வேண்டும், இதற்கு எதிரான அடையாளம் ஒழிய வேண்டும்' என்கிற கருத்து பேராபத்தில் முடிந்து விடுகிறது. ஜெர்மனியில் யூத இனம் இருக்கக் கூடாது என்கிற கருத்து பல லட்சக்கணக்கான மக்களை கொன்றது. கம்போடியாவில் அடையாள அரசியலே கூடாது என்று சொன்ன, கம்யூனிஸ்டுகளின் கலாச்சார புரட்சி பல லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தது.

இன்றைய உலகின் பல போர்கள், பயங்கரவாதம், இன அழிப்பு என எல்லாமே இத்தகைய அடையாள அழிப்பின் தொடர்ச்சிதான்.

கலைந்துபோன கனவுகள்

சில காலங்களில் சில நம்பிக்கைகள் முன் வைக்கப்பட்டன. 'உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்று குரல்கொடுத்த கார்ல் மார்க்சும், லெனினும் முன்வைத்த பாட்டாளி வர்க்கம் என்கிற ஒன்று இப்போது இல்லாமலேயே போய்விட்டது. பொருள் தான் அடிக்கட்டுமானம், மற்றதெல்லாம் மேல் கட்டுமானம்தான் - எனவே, உழைக்கும் வர்க்கம் தனது அடையாளத்தைக் கடந்து ஒன்றுபடும் என்கிற கருத்து படுதோல்வி அடைந்துவிட்டது.

இன்னொரு பக்கத்தில், ஒரு நாட்டின் மக்கள் எல்லோரும் ஒரே குடிமைச் சமூகமாக இருப்பார்கள், என்கிற ஜனநாயக நம்பிக்கையும் தகர்க்கப்பட்டுவிட்டது. இப்போது எல்லா நாடுகளும் பல சமூகங்களின் கூட்டமைப்பாக மட்டுமே இருக்கின்றன.

இந்தியாவிலும் கூட, 'மதத்தை அழிப்போம், சாதியை ஒழிப்போம்' என்று கனவு கண்டனர். அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் கண்ட அந்த கனவு, வெரும் கானல் நீர் என்பது தெளிவாகிவிட்டது.

மொத்தத்தில் இன்றைய உலகில், ஒவ்வொரு நாடும் பல்வேறு அடையாளங்களை பிரதிபளிக்கும் பல சமூகங்களின் கூட்டமைப்பாக மட்டுமே உள்ளது. எனவே, ஒவ்வொரு மனிதனும் சம உரிமைப் படைத்தவன் என்பது மட்டும் போதுமானது அல்ல. மாறாக, ஒவ்வொரு 'அடையாளக் குழுவும்' சம உரிமைப் படைத்தது என்கிற நிலையே இன்றைய முதன்மை அரசியல் கருத்தாகும்.

அடையாளத்தின் அரசியல்

அரசியல் என்பது அதிகாரத்தை நோக்கியது. எந்த ஒரு அடையாளமும் அதன் உரிமைகள் அங்கீகரிக்கப்படும் நிலையில், அதிகாரமும், வளமும் நியாயமாக பகிரப்படும் நிலையில் - அடையாள மோதல் தவிர்க்கப்படலாம். மாறாக, ஒரு அடையாளத்தை சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்துவோராகவும் மற்றொரு அடையாளத்தை சேர்ந்தவர்கள் ஒடுக்கப்படுவோராகவும் மாறும்போது - மனிதர்கள் ஒடுக்குபவர்களாகவும், ஒடுக்கப்படுபவர்களாகவும் பிரிந்து மோதிக்கொள்வது இயற்கையானது.
எந்த அடையாளம் தாக்கப்படும் நிலைக்கு செல்கிறதோ - அப்போது அந்த அடையாளம் முதன்மை பெருகிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் போது இது பலமுனை மோதலாகவும் மாறுகிறது. இரண்டு நபர்கள் ஒரு அடையாளத்தில் ஒன்றுபட்டு நிற்பதும், இன்னொரு அடையாளத்தில் எதிர்நிலை எடுப்பதும் இயல்பானது.

இந்திய இராணுவம் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி தாக்கியபோது - தமிழர்களின் கருத்தும், கன்னடர்களின் கருத்தும் ஒன்றுதான். இந்தியாவின் கிரிக்கெட் அணி, வேறொரு நாட்டுடன் மோதும் போது, தமிழர்களும் கன்னடர்களும் இந்தியா வெற்றிபெற வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். அதற்காக, காவிரியில் இரு இனமும் கரம் கோர்த்து நிற்க முடியாது.

சுவாதியை கொன்ற ராம்குமாருக்காக கொடி பிடிப்போரும், சுவாதிக்காக குரல்கொடுப்போரும் - காவிரிக்காக ஒன்றுபட்டுதான் போராடுகிறோம். அதற்காக, எல்லோரும் ஒன்றாக ராம்குமாருக்கு வீரவணக்கம் செலுத்த முடியாது.

சாதி, மொழி சார்ந்த இனம், மத நம்பிக்கைகளும் இப்படிதான். ஒருகருத்தில் ஒன்றுபட்டு நிற்போர், எல்லாவற்றிலும் ஒன்றுபட முடியாது.

மனிதனின் பல அடையாளங்கள் - எது முதன்மையானது?

ஒரு மனிதனுக்கு இருக்கும் அடையாளங்களில் எது முதன்மையானது என்பது அவ்வப்போது எதிர்கொள்ளும் சூழல், மற்றும் அவரவர் தரும் முன்னுரிமையை பொருத்தது.

இன்றைய சூழலில் சாதி, மொழி சார்ந்த இனம் ஆகிய அடிப்படைகளில் தமிழத்தில் வாழும் சமூகங்களுக்கு அச்சுறுத்தலும், சிக்கல்களும் இருக்கின்றன. (சிறுபான்மையினர் தவிர மற்றவர்களுக்கு மதம் சார்ந்த அச்சுறுத்தல் இல்லை).

இவற்றுள், 'சாதி மற்றும் மொழி சார்ந்த இனம்' - ஆகிய நிலைப்பாடுகளில் ஒன்றுக்கு எதிராக மற்றொன்றை நிறுத்தும் தேவை இம்மியளவும் இல்லை என்பதே நமது கருத்து. குறிப்பாக, தன்னுடைய சாதி சார்ந்த சிக்கல்களை முன்வைக்கிற எவரும் - தன்னுடைய மொழி சார்ந்த சிக்கல்களை மறுக்கவோ, எதிர்க்கவோ, புறக்கணிக்கவோ இல்லை (அதற்கான தேவையும் இல்லை).

மாறாக, தன்னுடைய மொழி சார்ந்த இனத்துக்காக குரல் கொடுப்பதாகக் கூறுகிறவர்கள் தான் - சாதியின் சிக்கல்களை மறுக்கிறார்கள். சாதி என்கிற அடையாளத்தையே அழித்தொழிக்க துடிக்கிறார்கள்.

'மொழியை விட்டுவிட்டு சாதியை தூக்கிப்பிடி' என்று இங்கு யாரும் சொல்லவில்லை. ஆனால், 'சாதியை விட்டுவிட்டு மொழியை துக்கிப்பிடி' என்றுதான் பலரும் சொல்கிறார்கள். இது தவறான போக்கு ஆகும்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால் - "நாம் எல்லோரும் இலங்கையின் குடிமக்கள், இதிலிருந்து தமிழர்களை தனியாக பார்க்க வேண்டாம்" - என்று இலங்கை அரசியல்வாதிகள் சொல்வதற்கும், "நாங்கள் எல்லோரும் தமிழர்கள், எங்களை சாதிகளால் பிரிக்க வேண்டாம்" என்று சில தமிழ் அரசியல்வாதிகள் சொல்வதற்கும் பெரிதாக வேறுபாடு இல்லை.

இரண்டுமே - இனவெறி தான்.

கருத்துகள் இல்லை: