Pages

புதன், நவம்பர் 30, 2016

தாய்லாந்தில் புதிய மன்னரும் - தமிழர்களின் வரலாற்று பெருமையும்!

தாய்லாந்து நாட்டில் எழுபது ஆண்டுகாலம் மன்னராக வீற்றிருந்த பூமிபால் அதுல்யதேஜ் கடந்த மாதம் இயற்கை எய்தினார். புதிதாக இளவரசர் மஹா வஜ்ர அலங்காரன் மன்னராக முடிசூடவுள்ளார். இந்த நிகழ்வுக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

மன்னராட்சி நடக்கும் தாய்லாந்து நாட்டில் அரசர்கள் இறைவனின் அவதாரமாகக் கருதப்படுகின்றனர். சிவன் மற்றும் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதி அரசனுக்கு முடிசூட்டும் வழக்கம் அங்கு உள்ளது. இந்த பாரம்பரியம் தமிழ்நாட்டின் பல்லவர்கள் மரபில் இருந்து உருவானதாகும். சோழ மன்னர்கள் இதனை பின்பற்றினர். இப்போதும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிச்சாவரம் மன்னர் பரம்பரையினருக்கு முடிசூடும் இந்த நடைமுறை உள்ளது.

தமிழ்நாட்டின் முடிசூடும் வழக்கத்தை பின்பற்றிதான் தாய்லாந்து நாட்டின் மன்னர்களும் முடிசூடிக்கொள்கின்றனர் என்பதற்கான ஆதாரங்கள் இப்போதும் உள்ளன. அதுகுறித்து காண்போம்:

தாய்லாந்தில் மன்னர் ஆட்சி

ஆசிய பகுதியில் தொடர்ந்து மன்னராட்சி நடைபெற்றுவரும் நாடு தாய்லாந்து ஆகும். அங்கு எழுபது ஆண்டுகாலம் மன்னராக இருந்த மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் கடந்த அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி காலமானார். அவரையடுத்து, இளவரசர் மஹா வஜ்ர அலங்காரன் தாய்லாந்தின் புதிய அரசராக பதவியேற்கும் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றம் நேற்று (29.11.2016) ஒப்புதல் அளித்ததுள்ளது. நாடாளுமன்றத் தலைவர் அடுத்த சில நாட்களில் இளவரசர் மஹா வஜ்ர அலங்காரனை சந்தித்து, அரியணையேற முறைப்படி கேட்டுக் கொள்வார்
அரசர் பூமிபால் அதுல்யதேஜுடன்  தாய்லாந்து பிரதமர் சந்திப்பு

தாய்லாந்து மக்களுக்கு மன்னனே இறைவன். புத்தமதத்துக்கு மாறினாலும், அங்கு பழங்கால தென்னிந்திய பண்பாடு நீடிக்கிறது. பிரதமர், இராணுவ தளபதி, நீதிபதிகள் என்று எல்லோரும் மன்னருக்கு முன்பாக மண்டியிட்டுதான் பேசுவார்கள். எல்லா அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களிலும் மன்னர் மற்றும் மகாராணியின் புகைப்படங்கள் இருக்கும். காலையில் அதனை வணங்கிவிட்டுதான் பணிகளை தொடங்குகிறார்கள்.

தினமும் மாலை 6 மணிக்கு மன்னரை வாழ்த்தும் பாடல் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஒலிக்கும். அப்போது போக்குவரத்து நிறுத்தப்பட்டு, எல்லா மக்களும் தமது வேலைகளை நிறுத்தி, எழுந்து நின்று மன்னரை வாழ்த்தி பாடுகிறார்கள். மன்னரை விமர்சிப்பது தாய்லாந்து நாட்டில் தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

தாய்லாந்து மன்னரும் தமிழும்

தாய்லாந்து நாட்டின் முதன்மை இதிகாசம் 'ராமாகியான்'. இது தமிழ் கம்ப ராமாயணத்தின் தாய்லாந்து வடிவம் ஆகும். அந்நாட்டின் முன்னாள் தலைநகரம் 'அயோத்தியா'. இப்போதைய தலைநகர் பாங்காக்கின் உண்மை பெயர் 'குரங்கு தீபம்'. அங்கு முடிசூடிக்கொள்ளும் மன்னர்கள் எல்லோரும் தம்மை ராமன் என்றே கூறிக்கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக, ஒரு பழங்கால மன்னனின் பெயர் 'ஸ்ரீ சூரியவம்ச ராமன் மாகா தர்ம ராஜாதிராஜன்'.

இப்போதைய மன்னர் வம்சம் 1782 ஆம் ஆண்டில் தொடங்கிய சாக்ரி வம்சம் ஆகும். இதன் முதல் மன்னர் முதலாம் ராமன் (Rama I) என்று அழைக்கப்பட்டார். மறைந்த பூமிபால் அதுல்யதேஜ் ஒன்பதாம் ராமன் (Rama IX) ஆகும். அடுத்து முடிசூடவுள்ள மஹா வஜ்ர அலங்காரன் பத்தாம் ராமன் (Rama X) என்று அழைக்கப்படுவார்.

முடிசூடலும் தமிழும்

தாய்லாந்து மன்னரின் முடிசூடல் நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் பல்லவர்கள் மற்றும் சோழ மன்னர்களின் முடிசூட்டல் நிகழ்வினை முன்மாதிரியாகக் கொண்டு நடப்பதாகக் கூறப்படுகிறது.
மன்னர் முடிசூடலுக்காக நடராஜர் சிலை முன்பு ஹோமம். 1925 ஏழாவது ராமன் முடிசூடல்

சாதாரண இளவரசனை இறைவனின் அவதாரமாக மாற்றும் வகையில், நடராஜர் சிலைக்கு முன்பாக ஹோமம் வளர்த்து, மந்திரங்கள் ஓதி, ஐந்து ஆறுகளில் இருந்து கொண்டுவரப்படும் புனித நீரால் இளவரசனுக்கு மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னார் அவர் ஊர்வலமாக அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். முடிசூட்டு விழாவில் காதில் திருவெம்பாவை பாடல்களும் திருப்பாவை பாடல்களும் ஓதப்படுகிறது.

தாய்லாந்து அரசரின் அரண்மணையில் இந்த பாடல்கள் பழங்கால தமிழ் கிரந்த எழுத்துகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. இந்த தமிழ் மந்திரங்கள் தேவாரம், திருவாசகம், திருப்பாவை பாடல்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக;

"தோடுடைய செவியன் விடையேறி யோர் தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாட்பணிந்தேத்தவருள் செய்த
பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவனன்றே" 

- எனும் சம்பந்தர் தேவாரப் பாடல்களும்,

"பித்தா பிறை சூடி பெருமானே அருளாளாய்
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூரருட்துறையுள் 
அத்தாவுனக்காளாயினி அல்லேன் எனலாமே"

- எனும் சுந்தரர் தேவாரப் பாடல்களும் பாடப்படுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளன.
1950 ஆம் ஆண்டில் முடிசூடலின் போது புத்தர் கோவிலில் இறைவனுக்கு முன்பாக அமர வைக்கப்பட்ட அரசர் பூமிபால் அதுல்யதேஜ் (சிதம்பரம் கோவில் முடிசூடலிலும் நடராஜருக்கு முன்பாக மன்னர் அமரவைக்கப்படுகிறார்)

அதாவது, தமிழ் மன்னர்கள் சிதம்பரம் கோவிலில் முடிசூட்டிக்கொண்ட முறைக்கு இணையாக, தாய்லாந்து மன்னர்களும் முடிசூடிக்கொள்கின்றனர். அதுவும் தேவாரம், திருவாசம், திருவெம்பாவை பாடல்கள் ஒலிக்க - அதன் பொருளோ, மொழியோ தெரியாமலேயே - தாய்லாந்து மன்னர்களின் முடிசூட்டு விழா நடக்கிறது.

தேவாரம், திருவாசம், திருவெம்பாவை பாடல்கள் காதில் விழுந்த பின்னரே, மனிதராக இருக்கும் மன்னர், இறைவனாக அவதாரமெடுக்கிறார் என்பது தாய்லாந்து நாட்டின் நம்பிக்கை ஆகும்.

திருவெம்பாவை - திருப்பாவை விழா

முடிசூடலின் போது மட்டுமின்றி, மற்றுமொரு திருவிழாவிலும் இப்பாடல்கள் ஒலிக்கின்றன. திருவெம்பாவை - திருப்பாவை திருவிழா என்பது சிவபெருமானையும் விஷ்ணுவையும் தாய்லாந்துக்கு அழைத்துவந்து ஊஞ்சலில் வைத்து ஆட்டும் திருவிழா ஆகும்.
 பாங்காக்: திருவெம்பாவை - திருப்பாவை ஊஞ்சல்

ஜனவரி மாதத்தில் 10 நாட்கள் நடத்தப்படும் இந்த திருவிழாவுக்காக, ஒரு மாபெரும் ஊஞ்சல் பாங்காக் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. அது அந்த நாட்டின் ஒரு பாரம்பரிய சின்னமாகவும் விளங்குகிறது.

கண்டுகொள்ளாத தமிழகம்

உலகின் எல்லா நாடுகளும் தமது பண்பாட்டு பாரம்பரிய தொடர்புகளை போற்றுகின்றன. ஆனால், தமிழ்நாட்டின் திராவிட ஆட்சியாளர்கள் இதுபோன்ற தமிழ் பண்பாட்டு சிறப்புகளை தேடுவதோ, அடையாளம் காண்பதோ, கொண்டாடுவதோ இல்லை என்பது வேதனையான விடயம் ஆகும்.

ஆதாரம்:

1. Siamese state ceremonies, by Horace Geoffrey Quaritch Wales, 1931

2. Some Aspects of Asian History and Culture, by Upendra Thakur, 1986 

3. God & King, the Devarāja Cult in South Asian Art and Architecture. by Arputha Rani Sengupta, 2001

கருத்துகள் இல்லை: