Pages

சனி, டிசம்பர் 31, 2016

பட்டை நாமம்: மோடி போட்டதும், மோடிக்கு போட்டதும்!

இந்தியாவின் 'மாபெரும் புரட்சி' என்று பேசப்பட்ட, மோடியின் செல்லாக்காசு நடவடிக்கை, இப்போது இந்திய வரலாற்றின் 'மாபெரும் ஊழல்' என்கிற நிலையை அடைந்துள்ளது. 

அதனால்தான் - கருப்பு பணத்தையும் கள்ள பணத்தையும் ஒழிக்கிறேன் என்று பேசிக் கிளம்பிய டேஷ் பக்த கும்பல், இப்போது 'கேஷ் லெஸ் எகானமி' - 'லெஸ் கேஷ் எகானமி' என்று புதிது புதிதாக புரூடா விடுகிறது. 

மோடிக்கு வங்கிகள் போட்ட பட்டை நாமம்

லட்சக்கணக்கான கோடி கருப்புப் பணத்தை பிடிக்கப்போகிறேன் என்று பிரதமர் மோடி பீலா விட்டார். ஆனால், டிசம்பர் 23 ஆம் நாள் கணக்கின் படி, மக்களிடம் மீதமிருந்த 1000 மற்றும் 500 ரூபாய் தாள்களின் மதிப்பு 97,613 கோடி ரூபாய் மட்டும் தானாம்! அதாவது - ஒரு லட்சம் கோடிக்கும் குறைவு.

நவம்பர் 8 ஆம் நாளில் மக்களிடம் இருந்த செல்லா தாள்களின் மதிப்பு 15,45,816 கோடி. அதில் டிசம்பர் 23 ஆம் நாள் வரை, வங்கிகளுக்கு திரும்பி வந்துள்ள பணம் 14,48,203 கோடி! மீதம் இருந்த பழை தாள்களின் அளவு 97,613 கோடி ரூபாய்.

டிசம்பர் 23 முதன் 30 வரையில் வங்கிகளில் செலுத்தப்படும் பழை தாள்கள், மற்றும் ஜனவரி 2 முதல் மார்ச் 31 வரை ரிசர்வ் வங்கிகளில் செலுத்தப்படவுள்ள பழை தாள்கள் ஆகியவற்றையும் சேர்த்து பார்த்தால் - மிகப்பெரிய பூஜ்யத்தை மோடி பெறுவார் என்பது இப்போது உறுதியாகியிருக்கிறது.

அதாவது, வங்கிகளின் துணையுடன் எல்லா கருப்பு பணமும் இப்போது நல்ல பணம் ஆகிவிட்டது! இது வங்கிகள் மோடிக்கு போட்ட பட்டை நாமம் ஆகும்!

மக்களுக்கு மோடி போட்ட பட்டை நாமம்

மக்களும் கருப்பு பண முதலைகளும் 14,48,203 கோடி ரூபாயை வங்கிகளில் செலுத்திவிட்டார்கள். ஆனால், மக்களுக்கு புதிய ரூபாய் தாள்களாக 5,92,613 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, வங்கிகளில் செலுத்தப்பட்ட பழைய தாள்களில் பாதியளவுக்கு கூட புதிய தாளை தரவில்லை. சுமார் 8,55,000 கோடி மக்கள் பணம் வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளது.

வலுக்கட்டாயமாக, கேஷ் லெஸ் எகானமிக்கு மாறுகிறோம் என்று சொல்லி, மக்கள் பணத்தை வங்கிகளில் குவித்து, பெரும் கார்ப்பரேட் பணக்காரர்களுக்கு (வராக்)கடனாக கொடுக்கப் போகிறார்கள். இது இந்திய வரலாற்றின் 'மாபெரும் ஊழல்'. மோடி மக்களுக்கு போடும் பட்டைநாமம்.

பாரத் மாதாகீ ஜே...!

கருத்துகள் இல்லை: