Pages

செவ்வாய், டிசம்பர் 20, 2016

சசிகலாவும் முக்குலத்தோரும்: தமிழகத்திற்கே வழிகாட்டும் சமூகம்!

முக்குலோத்தோர் சமூகத்தினர் யாராக இருந்தாலும், அவர்கள் எந்த அமைப்பில் இருந்தாலும் 'சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் தமிழகத்தின் முதல்வராகவும் ஆக வேண்டும்' என்று கருதுகிறார்கள். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லக்கண்ணு, முத்தரசன், தா. பாண்டியன் ஆகியோர் சசிகலாவை சென்று சந்தித்து ஆதரவு தெரிவிப்பதும், காங்கிரசு கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர், சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதும் தற்செயலானது என்று கருத முடியாது. சசிகலா ஆதரவுதான் பெரும்பாலான முக்குலத்தோர் சமூகத்தினரின் கருத்தாக இருக்கிறது. முக்குலத்தோர் சமுதாயத்தின் இந்த நிலைப்பாடு வரவேற்க கூடியதே.

சாதி, இனம் போன்ற அடையாளங்களுக்கு அப்பாற்பட்டதாக இந்திய அரசியலோ, தமிழக அரசியலோ ஒருபோதும் இருந்தது இல்லை. அரசியல் அதிகாரத்தில் உரிய இடத்தை பெறாத எந்த சமூகமும் உரிய உரிமைகளுடன் வாழ்வது சாத்தியமும் இல்லை. எனவே, தம்முடைய சாதியினர் உச்ச அதிகாரத்தை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்று முக்குலத்தோர் நினைப்பது இயல்பானதும் நியாயமானதும் ஆகும்.

ஐநா மேம்பாட்டு லட்சியங்களும் - ஏற்றத்தாழ்வும்

ஏற்றத்தாழ்வை போக்குவது என்பது ஒரு உன்னதமான அரசியல் நோக்கமாகும். ஏற்றத்தாழ்வு நிலை குறைந்த அளவில் உள்ள சமூகமே அமைதியானதாக, நீடித்ததாக இருக்கும் என்பது மெய்ப்பிக்கப்பட்ட உண்மை. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதும் நீடித்த ஆயுளும் கூட சமத்துவ சமுதாயத்தில்தான் அதிகம் என்பது ஆய்வுகள் மூலம் உறுதியாக்கப்பட்டுள்ளது.

இதற்கு நேரெதிராக - சமத்துவமற்ற சமூகத்தில் வன்முறையும், அமைதியின்மையும், பேரழிவும் நேர்கிறது. இப்போது உலகமெங்கும் இதற்கு நிகழ்கால எடுத்துக்காட்டுகள் உள்ளன.

ஏற்றத்தாழ்வை அகற்றுவது தான் 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை முன்வைத்துள்ள, நீடித்திருக்கும் மேம்பாட்டு லட்சியங்களின் (UN Sustainable Development Goals 2030) முதன்மை நோக்கம் ஆகும். இதனை 'ஒருவரும் பின்தங்கவிடப்படாத வளர்ச்சி' (Leaving no one behind) என்று ஐநா அவையின் தீர்மானம் குறிப்பிடுகிறது. 2016 - 2030 ஆம் ஆண்டுகளுக்கு இடையே உலகளாவிய வளர்ச்சி இலக்கு இதுதான்.

ஏற்றத்தாழ்வு நிலை என்பது - தனிநபர் அளவிலான ஏற்றத்தாழ்வு (செங்குத்தான சமத்துவமின்மை - Vertical inequality), குழு அளவிலான ஏற்றத்தாழ்வு (கிடைமட்டமான சமத்துவமின்மை - Horizontal inequality) என இருவகைப்படும்.

சமத்துவமின்மை என்பதை பொத்தாம் பொதுவாக 'ஏழை - பணக்காரன்' என்று வரையறுக்க முடியாது. மாறாக, ஒருவர் சார்ந்துள்ள சமுதாயத்தின் அடிப்படையிலும் வரையறுக்க வேண்டும். கிடைமட்டமான சமத்துவமின்மைக்கு தனிமனித முன்னேற்றத்தின் அடிப்படையில் தீர்வு காண முடியாது. மாறாக, பின் தள்ளப்பட்டுள்ள குழுவே முன்னேற்றம் அடைந்தாக வேண்டும்.

இந்திய சூழலில் குழு அளவிலான ஏற்றத்தாழ்வு (Group inequality) நிலையை தீர்மானிப்பதில் சாதிதான் முதன்மையானது. இந்தியாவில் தனிமனித மேம்பாட்டின் மூலம் சமத்துவ நிலையை அடைவது ஒருபோதும் சாத்தியமில்லை. சாதி அளவிலான மேம்பாடுதான் உண்மையான சமத்துவத்துக்கு வழிவகுக்கும். எனவே, சாதி அடிப்படையிலான சமத்துவமின்மைக்கு தீர்வு காண்பது தான் - இந்தியாவில் ஐநா நீடித்திருக்கும் மேம்பாட்டு லட்சியங்களை அடைவதற்கான முதன்மை வழியாக இருக்கும்.

1. பொருளாதாரமும் சாதியும்

இந்தியாவின் பொருளாதாரத்தை ஆக்கிரமித்திருப்பது சாதிதான். இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார பலம் வாய்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் குறித்த ஒரு ஆய்வு, இந்தியாவின் முதன்மையான 1000 கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில் இருப்போர் 93% பிராமணர்களும் பனியாக்களும்தான் என்கிறது. மக்கள் தொகையில் 5% அளவு கூட இல்லாத சாதிகள்தான் இந்திய பெரும் முதலாளிகளில் 93% அளவாக உள்ளனர். (8 லட்சம் கோடி மக்கள் பணத்தை வங்கிகளில் இருந்து கொள்ளையடித்திருப்பது இத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான்).

அதாவது, தனிநபரின் தகுதியோ திறமையோ கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர்பதவியை தீர்மானிக்கவில்லை. மாறாக, உயர்சாதியில் பிறந்த பிறப்புதான் கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர்பதவியை தீர்மானிக்கிறது.

2. ஊடகமும் சாதியும்

இந்திய ஊடகங்களை ஆக்கிரமித்திருப்பதும் சாதிதான். புதுதில்லியின் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களின் மிக முக்கிய பொறுப்புகளில் உள்ள 300 பத்திரிகையாளர்களின் சாதியை ஆய்வு செய்த போது - அவர்களில் 88% பேர் உயர்சாதியினர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் பிராமணர்கள் மட்டுமே 49% ஆகும். இதற்கு நேர் எதிராக, மக்கள் தொகையில் பாதியளவுக்கும் கூடுதலாக உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) அளவு வெறும் 4% மட்டுமே.

அதாவது, தனிநபரின் தகுதியோ திறமையோ ஊடகங்களின் உயர்பதவியை தீர்மானிக்கவில்லை. மாறாக, உயர்சாதியில் பிறந்த பிறப்புதான் ஊடகங்களின் உயர்பதவியை தீர்மானிக்கிறது.

3. அரசியல் கட்சிகளும் சாதியும்

இந்திய அரசியல் கட்சிகளை ஆக்கிரமித்திருப்பதும் சாதிதான். இந்தியாவின் தேசிய கட்சிகள் அனைத்தும் மேல்சாதி ஆதிக்கத்தில் இருக்கும் கட்சிகளே ஆகும். குறிப்பாக, இந்திய அரசியல் கட்சிகளின் தலைமைக்குழுவில் உயர்சாதியினரே மிக அதிக எண்ணிக்கையில் இடம் பிடித்துள்ளனர். பாஜகவின் உயர்பதவிகளில் 75%, காங்கிரசு கட்சியின் உயர்பதவிகளில் 73%, சிபிஎம் கட்சியின் உயர்பதவிகளில் 85%, சிபிஐ கட்சியின் உயர்பதவிகளில் 76% - என உயர்சாதியினர் மட்டுமே இடம் பிடித்துள்ளனர்.

அதாவது, தனிநபரின் தகுதியோ திறமையோ அரசியல் கட்சிகளின் உயர்பதவியை தீர்மானிக்கவில்லை. மாறாக, உயர்சாதியில் பிறந்த பிறப்புதான் அரசியல் கட்சிகளின் உயர்பதவியை தீர்மானிக்கிறது.

4. நீதித்துறையும் சாதியும்

இந்திய நீதித்துறை முழுக்க முழுக்க மேல்சாதி ஆதிக்கத்தில் உள்ளது. உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்ற தலைமைப் பதவிக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பிற்படுத்தப்பட்டவர்கள் (OBC) வந்துள்ளனர். இந்திய உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளில் 70% பேர் வெறும் 135 உயர்சாதி குடும்பங்களில் இருந்து வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

அதாவது, தனிநபரின் தகுதியோ திறமையோ நீதித்துறை உயர்பதவியை தீர்மானிக்கவில்லை. மாறாக, உயர்சாதியில் பிறந்த பிறப்புதான் நீதித்துறை உயர்பதவியை தீர்மானிக்கிறது.

- இவ்வாறாக, பொருளாதாரம், ஊடகம், அரசியல், அதிகாரப்பதவிகள், நீதித்துறை என எல்லாவற்றிலும் சாதீய ஆதிக்கம் நீடிக்கிறது. இந்திய விடுதலை சாதியற்ற சமூகத்தை தோற்றுவிக்கும் என்று கற்பனை செய்யப்பட்டது. அந்தக் கற்பனை இப்போது காலாவதியாகிவிட்டது. இந்திய விடுதலைக்கு பின்னர், 70 ஆண்டுகளைக் கடந்தும் இப்போதும் சாதி ஆதிக்கமே தொடர்கிறது. எனவே, இதற்கானத் தீர்வும் சாதி ரீதியாகவே வந்தாக வேண்டும்.

சாதி ஏற்றத்தாழ்வுக்கு தீர்வு சாதி அரசியலே

"சாதி அரசியல் என்பதே சாதீய மேலாதிக்க முறைக்கு எதிரானது. சாதிதான் ஜனநாயகத்தை வலிமையாக்குகிறது" (...we came upon two of India's greatest paradoxes, that caste was anti-caste, and that caste strengthened democracy) என்பது இந்திய அரசின் பத்மபூஷன் விருதுபெற்ற லாயிட் ருடால்ஃப் எனும் அமெரிக்க அறிஞரின் கருத்து ஆகும். ஏனெனில், சாதி அரசியல் என்பது 'ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பை தகர்க்க முயல்கிறது. அதுவே, சாதாரண மக்களை ஜனநாயக தேர்தல் அரசியலில் ஈடுபடவும் ஊக்கப்படுத்துகிறது' என்றார் அவர்.

ஒருகாலத்தில் கோவில் விழாக்களில் சம உரிமை வேண்டும், சத்திரிய பட்டங்கள் வேண்டும் என்று 'சமூக அங்கீகாரத்துக்காக' போராடிய சாதி அமைப்புகள் - இந்திய விடுதலைக்கு பின்னர் 'அரசியல் அதிகாரம் வேண்டும்' என்கிற நிலைப்பாட்டுக்கு மாறின. சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என உயர்பதவிகளில் தத்தமது சாதியினர் இடம்பெற வேண்டும் என்கிற சாதி அமைப்புகளின் போராட்டமே இந்திய ஜனநாயகத்தை பரவலாக்கியது என்பது அவரது ஆராய்ச்சியின் முடிவாகும். இந்த ஆய்வுக் கருத்தை அவர் 1960 ஆம் ஆண்டில் வெளியிட்டார். (The Political Role of India's Caste Associations, Lloyd I. Rudolph 1960)

லாயிட் ருடால்ஃப் அவர்களின் கருத்து இப்போதும் உயிரோட்டமாக இருக்கிறது. இந்தியாவின் சமத்துவமின்மைக்கு எதிரான ஒருசில மாற்றங்கள் சாதி ரீதியான போராட்டங்களின் மூலமே சாத்தியமாகியிருக்கிறது. இடஒதுக்கீடும், மண்டல்குழு போராட்டமும் அதற்கான அடையாளம் ஆகும். இதன் அடுத்தக்கட்ட நகர்வாக, முக்குலத்தோரின் ஒற்றுமையை கொள்ளலாம்.

"முக்குலத்தோரின் வெற்றி"

தமிழ்நாட்டின் அரசியலில் முக்குலத்தோர் சமூகம் தலைமை அதிகாரத்தை பிடிப்பது என்பது மிகப்பெரிய மாற்றம் ஆகும். சசிகலா என்கிற தனிநபரோ, அவரது பின்னணியோ இங்கே முக்கியமானது அல்ல. மாறாக, சசிகலா என்கிற அடையாளத்தை முக்குலத்தோர் சமூகம் எவ்வாறு தமக்கான அடையாளமாக மாற்றுகிறது, அவர்மீது நம்பிக்கை கொள்கிறது என்பதுதான் இங்கே முக்கியமானது ஆகும்.

அரசியல் சித்தாந்தங்கள், கொள்கை வேறுபாடுகள் என எல்லாவற்றையும் கடந்து - அனைத்து நிலைகளில் உள்ள முக்குலத்தோரும் தம்மை சார்ந்த ஒருவர் முழுமையான முதல்வராக வரவேண்டும் என ஒன்றுபட்டு நிற்கின்றனர்.

சர்வதேசிய வர்க்க அடிப்படை பேசிய கம்யூனிஸ்டுகள், இந்தியனாக ஒன்றுபடக்கோரிய தேசிய அரசியல்வாதிகள், திராவிட இனம் என்று பேசிய திராவிடக் கட்சியினர், சாதியை மறந்து தமிழனாக ஒன்றுபடக்கோரிய தமிழ்த்தேசியர்கள் என அனைத்து தரப்பினரும் இப்போது 'முக்குலத்தோர்' என்கிற ஒற்றைப்புள்ளியில் இணைகின்றனர். அரசியல் ரீதியில் வாக்களித்து அதிகாரத்தை பிடிக்க ஒன்றுபடாவிட்டாலும் கூட, அதிகாரம் 'ஏதோ ஒரு வழியில்' தம்முடைய சாதியின் கைகளுக்கு வரும்போது அதனை தவறவிடக்கூடாது என்று ஒன்றுபடுகின்றனர். இந்த ஒற்றுமை வரவேற்கக் கூடியதே ஆகும்.

இதே ஒற்றுமையை மற்ற சமூகங்களும் பின்பற்றுவது, தமிழ்நாட்டின் ஜனநாயகத்தை மேம்படுத்தவும், சமூகங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வை அகற்றவும்,  'ஒருவரும் பின்தங்கவிடப்படாத வளர்ச்சி' (Leaving no one behind) எனும் ஐநா நீடித்திருக்கும் மேம்பாட்டு இலக்குகளை (UN Sustainable Development Goals 2030) தமிழ்நாட்டில் சாத்தியமாக்கவும் வழிசெய்யும்.

குறிப்புகள்: 

1. 'அதிமுக என்கிற கட்சி நல்லாட்சியை அளிக்கும், சசிகலா மற்றும் அவரைச் சார்ந்தவர்களும் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவார்கள்' - என்றெல்லாம் நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மக்களின் கடந்த கால அனுபவங்கள் கசப்பானதாக இருக்கின்றன. அதே நேரத்தில், இவர்களுக்கு மாற்றாக அதிமுகவில் வேறு யாராவது வந்தாலும் கூட - காட்சிகள் மாறிவிடப்போவதில்லை.

2. அதிமுக - திமுக கட்சிகள் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான கட்சிகள் என்பதே நமது நிலைப்பாடு. அந்தக் கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக பாடுபடுவோம். எந்த சாதியினர் அதிமுகவின் தலைமைப் பதவிக்கு வந்தாலும் - மாற்றத்தை விரும்புவோர் அதிமுக கட்சியை எதிர்க்கவே செய்வார்கள்.

3. ஒவ்வொரு சாதியும் அதன் விகிதாச்சார எண்ணிக்கைக்கு ஏற்ப, அனைத்து அதிகாரங்களையும் உரிமைகளையும் பெறவேண்டும் என்கிற 'வகுப்புவாரி உரிமையே' நியாயமானது ஆகும். எந்த ஒரு சமூகமும் அதன் விகிதாச்சார அளவை விட அதிகமான இடங்களை எடுத்துக்கொண்டால் அது சாதி ஆதிக்கமே ஆகும். அத்தகைய சாதி ஆதிக்கத்தை எந்த சாதி முன்னெடுத்தாலும் அதனை எதிர்ப்போம்.

கருத்துகள் இல்லை: